திருப்பரங்குன்றம்: "குரலை உயர்த்தாதீங்க"! CISF வீரர்களை வைத்து வழக்கறிஞரை வெளியேற்றிய நீதிபதிகள்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் போது குரலை உயர்த்தி கத்தி பேசிய வழக்கறிஞர் அருணாச்சலத்தை வெளியேற்றுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணனும் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு வழக்கறிஞர் அருணாச்சலம் கேட்டார். அப்போது நீதிபதிகள், இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. எனவே தற்போது அனுமதிக்க முடியாது என்றனர்.

ஆனால் வழக்கறிஞர் அருணாச்சலம், இதை ஏற்க மறுத்து வாதம் செய்தார். அப்போது நீதிபதிகள், இப்படியெல்லாம் குரலை உயர்த்தி பேசக் கூடாது என்றனர். ஆனாலும் அவர் பேசிக் கொண்டே இருந்தார். இதையடுத்து அவரை வெளியேற்றுமாறு சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், அறநிலையத் துறை உள்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம், "கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அது அவருக்கான உரிமை அல்ல. கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றுவது வேறு, வீட்டில் தீபம் ஏற்றுவது வேறு.
கார்த்திகை தீபத்தை வீட்டில் தீபம் ஏற்றுவது போல் கருதுகிறார் மனுதாரர். தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது. 100 ஆணடுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நடைமுறை ஆகமவிதிபடி நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட ஆகமவிதிகளை மீறி எதையும் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சமண முனிவர்கள் இரவு நேரங்களில் ஆலோசனை செய்யும் போது அந்த பகுதியில் தூண் வைத்து வெளிச்சத்துக்காக விளக்கேற்றியுள்ளனர். கார்த்திகை தீபத்திற்காக அமைக்கப்பட்ட தூண் அது கிடையாது.
இது போன்று மதுரையில் 4 இடங்களில் சமண முனிவர்கள் அமைத்த தூண்கள் இருக்கின்றன. இது இந்துக்களுக்கு சொந்தமான தூண் கிடையாது. இந்த வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசரமாக கையாண்டார்.
குன்றன் இருக்கும் இடம் குமரன் இருப்பார் என்பது சரி! ஆனால் அதற்காக தூண் இருக்கும் இடங்களில் எல்லாம் தீபம் ஏற்ற சொன்னால் எப்படி என தனது வாதத்தை முன் வைத்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் அருணாச்சலம் இடையீட்டு மனு தாக்கல் செய்ய கோரினார். அதற்கு நீதிபதிகள் மறுத்தனர். அவரோ நீதிபதிகள் சொல்வதை ஏற்க மறுத்து வாதிட்டார். அப்போது அவரை நீதிபதிகள் வெளியேற்றுமாறு உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications