தாய் கழகத்திற்கு வருகை தரும் டாக்டர் சரவணன்! மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்! இணைப்பு விழா எப்போது?
மதுரை: அண்மையில் பாஜகவுக்கு டாடா காட்டிவிட்டு திமுகவில் இணைவதற்காக காத்திருக்கும் டாக்டர் சரவணனை வரவேற்று திமுக நிர்வாகிகள் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்துள்ளனர்.
டாக்டர் சரவணன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக திமுக, மதிமுக, பாஜக, என பல கட்சிகளை சேர்ந்தவர்களும் கட்சி பாகுபாடின்றி வந்திருந்தனர்.
திமுக முப்பெரும் விழா முடிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முறைப்படி சரவணன் திமுகவில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிர்ப்பும் புத்துணர்வும் பெருகுகிறது! திராவிட இயக்கத்தின் சொந்த மாதம் செப்டம்பர்-ஸ்டாலின் பூரிப்பு
டாக்டர் சரவணன்
பாஜகவில் மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த டாக்டர் சரவணன், மத அரசியல் தனக்கு ஒத்துவரவில்லை எனக் கூறிவிட்டு அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிக் கொண்டார். இதையடுத்து மீண்டும் அவர் பழையபடி திமுகவில் இணையவிருப்பதாக தகவல் உலா வந்தது. இந்நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் தாய் கழகத்திற்கு வருகை தரும் டாக்டர் சரவணன் எனக் குறிப்பிட்டு மதுரை மாநகர் முழுவதும் திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
பிறந்தநாள்
இது மட்டுமல்லாமல் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக திமுக, மதிமுக, பாஜக, என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். எந்தக் கட்சியிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாத தருணத்தில் தன்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்காக ஒரு பெரும் படையே திரண்டதை கண்டு சரவணன் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
தீவிர அரசியல்
தனக்காக இல்லையென்றாலும் தன் மீது நம்பிக்கை கொண்டு அரசியல் செய்து வரும் தனது ஆதரவாளர்களுக்காகவாவது இனி தீவிர அரசியலில் கவனம் செலுத்தும் திட்டத்தில் இருக்கிறாராம் சரவணன். திமுக முப்பெரும் விழா முடிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முறைப்படி சரவணன் திமுகவில் இணையவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மதுரையில் 25,000 பேரை திரட்டி உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து பிரம்மாண்டம் காட்டத் திட்டமிட்டுள்ளார் சரவணன்.
பாஜகவினரும் வாழ்த்து
இதனிடையே நேற்று பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்காக பழைய பாசத்தில் சென்ற பாஜகவினர் சிலர் சரவணனனிடம் சில உறுதிகளை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் கூடுதல் உற்சாகமடைந்த சரவணன் தரப்பு விரைவில் இணைப்பு விழாவை நடத்தி அதில் பாஜகவிலிருந்து பலரையும் தங்கள் பக்கம் அழைத்துச் செல்ல காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது.