18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது.. மதுரை ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
மதுரை: 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியும் , திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ கே போஸும் காலமாகிவிட்டதால் அந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளனர்.
அதுபோல் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இதனால் அவர் எம்எல்ஏ பதவி இழந்த தொகுதியும் காலியாக உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இடைத்தேர்தல்
திருவாரூர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என மதுரை ஹைகோர்டில் திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சபாநாயகர்
அந்த மனுவில் அவர் கூறுகையில் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த சம்பவத்தில் 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் 18 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில் சபாநாயகர் செய்தது சரியே என ஹைகோர்ட் தீர்ப்பளித்துவிட்டது.
உத்தரவிட வேண்டும்
எனவே சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்யபோவதில்லை என 18 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர். இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
18 தொகுதி இடைத்தேர்தல்
இந்த வழக்கு நீதிபதிகள் கே கே சசிதரன், பி டி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த 8-ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வருவதால் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கு முடித்து வைப்பு
அதுமட்டுமல்லாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த ஏப்ரல் 24-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.