ஸ்டெர்லைட்.. தற்போதைய நிலையே தொடர வேண்டும். மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
Recommended Video
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாட்களாக நடந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில், துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே தீர்ப்பு செல்லத்தக்கத்து அல்ல என அறிவிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் போராட்டக்குழுவைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பின்னர் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். பாத்திமா பாபுவின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு பெஞ்ச் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.