அட.. யாருமே இப்படி யோசிக்கலியே.. ரெய்டு பின்னணியில் "இதுதான்" காரணமாம்.. உதயகுமார் சொல்வதை பாருங்க!
மதுரை : ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய போது அதிக விலை கொடுத்து எல்இடி விளக்குகளை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சென்னை கோவை உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்
ஓபிஎஸ் கோஷ்டிக்கு அடிமேல் அடி- ஆபீஸ் சாவி வழக்கிலும் பெரிய செட் பேக்.. அதிமுகவில் எதிர்காலம் அம்போ?
திடீர் சோதனை
சென்னை தாம்பரம் கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள எல்இடி பல்புகள் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான கணபதி என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக முழுவதும் பல்வேறு ஊராட்சிகள் நகராட்சிகளுக்கு எல்இடி பல்புகள் அதிக விலைக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்கள் கைது
இது தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நிறுவனத்தில் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். கோவையிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்.பி.உதயகுமார்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," வரலாறு சிறப்பிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கி உள்ளனர், கட்சியின் அடிப்படை உறுப்பினராக பன்னீர் செல்வம் இல்லை, அவர் எப்படி உரிமை கூற முடியும்.
திசை திருப்பும் முயற்சி
அதேபோல் அவர் செய்த கலவரத்தையும் கருத்தில் கொண்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து, தலைமை கழக சாவியை உயர்நீதிமன்றம் எடப்பாடியாரிடம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை கழகத்தில் உள்ள தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூழ்நிலையில், இதை திசை திருப்பவும் தமிழக அரசு காழ்புணர்ச்சியுடன் சோதனையை நடத்தியிருக்கிறது.இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது' என கூறினார்.