உளறிகொண்டே இருக்காதீங்க.. இந்துத்துவா பிரசாகராக மாறிய ஆளுநர் ஆர்என் ரவி.. வைகோவுக்கு வந்ததே கோபம்
மதுரை: ‛‛தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உளறிக்கொண்டே இருக்கிறார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டின் இலக்கியம் என கூறுகிறார். அவர் முழுக்க முழுக்க சனாதனவாதியாக மாறி இந்துத்துவா பிரசாகராக உள்ளார்'' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக ஆளுநராக ஆர் என் ரவி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது தமிழகத்தின் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
குறிப்பாக ஏராளமான கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் ஆர்என் ரவி சிறப்பு விருந்தினராக சென்று வருகிறார். இந்த வேளையில் இந்து மதம், சனாதன தர்மம், திருக்குறம், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகனுக்கு திடீர் கல்யாணம்.. நெருங்கிய நண்பர்களோடு எளிமையான கொண்டாட்டம்
விவாதத்தை கிளப்பும் ஆளுநர் பேச்சு
இந்நிலையில் தான் இந்து மதம், சனாதன தர்மம் பற்றி ஆளுநர் ஆர்என் ரவி பேசும் பேச்சுக்கள் அடிக்கடி விவாதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஆர்என் ரவிக்கு கண்டனம் தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. சமீபத்தில் கூட திருக்குறளை ஜியுபோப் சரியாக மொழி பெயர்க்கவில்லை என ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
கோவை கார் வெடிப்பு பற்றி பேச்சு
இந்நிலையில் தான் கோவை நவக்கரையில் உள்ள ஜே எஸ் எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛பயங்கரவாதத்தை உருவாக்கும் ஓர் இடமாக கோவை மாநகரம் திகழ்வது வருத்தம் அளிக்கிறது. இந்த தாக்குதல் ஆபத்தானது. இதை முறியடிக்க வேண்டும். இந்த வழக்கு குறித்த தமிழக போலீஸ்காரர்களின் விசாரணை பாராட்டத்தக்கது. எனினும் கால தாமதம் செய்யாமல் முன் கூட்டியே இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) கொடுத்திருக்க வேண்டும்'' என்றார்.
சனாதன தர்மம்
மேலும், ‛‛தமிழகம் தான் அதிக சித்தர்களையும், யோகிகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சனாதன தர்மம் எனும் அடிப்படை கொள்கையினை தமிழக மக்கள் மறந்துவிடக்கூடாது" என்று கூறினார். தற்போது இது மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
வைகோ பேட்டி
அந்த வரிசையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக வைகோ கூறியதாவது:
இந்துத்துவா பிரசாகராக உளறும் ஆளுநர்
தமிழக ஆளுநர் போன்று உளறல் பேர்வழியை நான் பார்த்தது இல்லை. உளறி கொண்டே இருக்கிறார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டின் இலக்கியம் என கூறுகிறார். திருக்குறள் பற்றி பேசுகிறார். அவர் என்ன கருத்து சொல்கிறார்?. அவர் முழுக்க முழுக்க சனாதனவாதியாக மாறி இந்துத்துவா பிரசாகராக மாறிவிட்டார். இந்துத்துவா பிரசாகராக தான் ஆளுநரை தமிழ்நாட்டில் நியமனம் செய்துள்ளனர். அவரது உளறல்களுக்கு கணக்கு இல்லாத நிலை உள்ளது.
கடமையை செய்த அரசு
இதையடுத்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ பதிலளிக்கையில், ‛‛கோவை கார் வெடிப்பில் கடமை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.