குரங்கு அம்மை பரவல்.. மாநில எல்லை, விமான நிலையங்களில் கண்காணிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மதுரை: குரங்கு அம்மை நோய் தடுப்பு தொடர்பாக பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது. டெல்லியில் ஒருவர், கேரளாவில் மூவர் என மொத்தம் 4 பேருக்கு இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன் ஆய்வு
இதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஐசிஎம்ஆர் விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எல்லைகளில் ஏற்பாடு
வெளிநாடுகளில் இருந்து தினமும் வரும் 300 முதல் 400 பயணகளுக்கு ரேண்டம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களை, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கை
மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையோடு இணைந்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களைக் காப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications