கொட்டித்தீர்த்த கனமழை..மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்..ஸ்தம்பித்த போக்குவரத்து
மதுரை: கொட்டித் தீர்த்த கனமழையால் மதுரை மாநகரத்தின் முக்கிய வீதிகள், மீனாட்சியம்மன் கோயில், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. சாலைகளில் பெருகிய வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவில் மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது வழக்கத்தை விட அதிகமாக வியர்வையின் தாக்கமும் இருந்தது.
மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு மதுரை நகர் மற்றும் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த தொடர் மழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து போனது. ஆங்காங்கே மரங்களும் சாலையில் சரிந்தன. பல இடங்களில் நேற்று மாலை வரை மழைநீர் வடியவில்லை.

பேரையூரில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய 34 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பி.முத்துலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்த திருமலையம்மாள் என்பவருடைய வீடு சுவர் இடிந்து விழுந்தது.
நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் வானிலை மாறியது. கரு மேகங்கள் சூழ்ந்தன. மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது.
மதுரையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் நகர்முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்தது. இந்த பலத்த மழைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதில் சுவாமி சன்னதி கொடி மரம் பகுதி மற்றும் ஆடி வீதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று இரவு ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா கோவிலுக்குள் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உசிலம்பட்டி பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் மழை கொட்டியது. அதில் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. கண்மாய் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது.
பாலமேடு மேற்கு பகுதியில் வகுத்து மலை, சிறுமலை, மஞ்ச மலை, செம்பூத்து மலை தொடர்ச்சிகளில் அமைய பெற்றுள்ளது சாத்தியார் அணை. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கண்மாய் ஏற்கனவே ஒரளவுக்கு தண்ணீர் இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. அதன் தண்ணீர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்கிறது.
தொடர் மழை காரணமாக மதுரையை சுற்றி உள்ள கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications