மதுரையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை..சாலைகளில் பெருகிய வெள்ளம்
மதுரை: மதுரையின் நகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மதுரை தமுக்கம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பெருகிய வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலும் கத்திரி வெயில் காலம் போல வாட்டி வதைத்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நகர் முழுவதும் அனல் காற்று வீசியது. மதுரை நகர மக்கள், உச்சி நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். அந்தளவுக்கு வெயிலின் கொடுமை மிக கொடூரமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை கொட்டி வருகிறது. சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மதுரையில் இதமான காலநிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் சற்று குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. சித்திரை திருவிழா தொடங்கியதில் இருந்து மதுரையில் மழை பெய்து வருவதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென்று பகலில் இருந்து மதுரையில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்தில் மழை பல இடங்களில் கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக மதுரையில் குளுமை பரவியது. நேற்று பெய்த மழையால் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே குழாய் பதிக்கும் பணிக்காக கிரைம் பிராஞ்ச் அருகே மேயர் முத்து பாலம் ஏறும் வழியில் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் விடப்பட்டு இருந்தது. நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக இந்தப் பள்ளம் வாகன போக்குவரத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மேலும் குழி விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் திடீரென ஏற்பட்ட அந்த குழிக்குள் சிக்கின. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பெரியார் பஸ் நிலையத்துக்கு உள்ளே வரவும் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் பேருந்துகள் சிக்கித்தவித்தன. வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாயினர்.
தமிழ்நாட்டில் இன்றும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications