ராஜராஜசோழன் குறித்த பேச்சால் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இயக்குனர் பா ரஞ்சித் நிம்மதி
மதுரை : ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து இருந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்போது அந்த வழக்கையே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 5-ல் நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவரது ஆட்சி காலம் இருண்ட காலம். டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது என குறிப்பிட்டார். ரஞ்சித்தின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்து மக்கள் கட்சி
இது தொடர்பாக ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் ரஞ்சித் மீது, கலகம் உண்டாக்குதல், சாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

செந்தமிழ் நாட்டுச் சேரிகள்
தன் மீதான வழக்கை எதிர்த்து இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தாவது ''நீலப் புலிகள் அமைப்பு சார்பில் 2019 ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களைக் குறிப்பிட்டேன். டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, 'செந்தமிழ் நாட்டுச் சேரிகள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தெரிவித்தேன்.

உள்நோக்கம் இல்லை
பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக் கூட்டத்தில் பேசினேன். நான் பேசிய தகவல்களை பலரும் பேசியுள்ளனர். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை.

வழக்கை ரத்து செய்க
எனது பேச்சு எந்த சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே என் மீது திருப்பனந்தாள் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ரஞ்சித் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications