உள்ளாடைகளை கழற்றி காட்டி பெண் போலீசிடம் தகராறு செய்த இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன்.. ஐகோர்ட் ஆணை
மதுரை: கோவிலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் காவலரிடம், உள்ளாடையை கழற்றிக் காட்டி தகராறு செய்த வழக்கில் கைதான இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
தஞ்சாவூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பு அமர்ந்து சிலர் மது குடித்து வருவதாகவும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பதாகவும் போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆதிநாயகி என்கிற பெண் காவலர் சென்றார். அவர் கோயிலின் முன்பு குடித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றார்.

ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, பெண் காவலரிடம் உள்ளாடைகளை கழற்றிக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்டனர். இது குறித்து பெண் காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அநாகரீமாக நடந்துகொண்ட மூவரையும் காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்று விசாரித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் மூவரில் ஒருவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருக்கின்றன. மற்ற இருவர், குபேந்திரனின் சகோதரர் ரவி மற்றும் இந்து முன்னணி நிர்வாகி முத்தமிழ்ச்செல்வன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.
சிறையில் இருக்கும் குபேந்திரன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு அண்மையில் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, "இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது" என்று தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் ஜாமீன் கோரி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் காவல்துறையினருக்கு எதிரான எந்த அவமரியாதையும் செய்ய மாட்டேன் என உறுதி மொழிப்பத்திரம் அளித்ததால் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications