முதல்வர் முதலீடுகளை ஈர்க்கிறார்.. அதிகாரிகள் ரிட்டர்ன் பண்ணி விட்டுறாங்க! யார் சொன்னது தெரியுமா?
மதுரை : தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தாலும் இங்குள்ள அதிகாரிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பல முதலீடுகள் திரும்ப செல்கின்றன என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் முட்புதர்கள் மண்டி நீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதனால் விவசாயிகள் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களில் உள்ள சீமை கருவேலை மரங்களை வெட்டி அகற்றி கால்வாய்களை தூர்வார தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை கோரியுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தொண்டு நிறுவனத்தில் அங்கம் வகிக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில்," ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா, சாயல்குடி தாலுகா, கமுதி தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் முட்புதர்கள் மண்டி நீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அதனை நம்பி விவசாயம் செய்யும் இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். பின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே இந்த பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களில் உள்ள சீமை கருவேலை மரங்களை வெட்டி அகற்றி கால்வாய்களை தூர்வார எங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரி வின்னப்பித்தோம் ஆனல் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால் எங்கள் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வார தங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமாக தொண்டு செய்ய வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அரசு அதிகாரிகள் கொடுப்பதில்லை.
தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார் ஆனால் இங்குள்ள அதிகாரிகள் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி விடுகிறார்கள் ஏனென்றால் அவர்களிடம் லஞ்சம் பெற முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் கால்வாய்களை தூர் வாருவது குறித்து மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications