சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா...? உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை விளாசல்
மதுரை: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தின் மீது மத்திய மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இல்லையா என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த கேள்வியை எழுப்பியது நீதிமன்றம்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
மருந்து இல்லை
கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று உலகமே முடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளிலும் இதற்கு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, போன்ற நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு இது தான் மருந்து என அதிகாரப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இந்திய மருந்து
இந்திய மருத்துவ முறைகளில் மிக நீண்ட பாரம்பரிய பின்னணியை கொண்டது சித்த மருத்துவம். இது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதன் அடிப்படையில் சித்த மருந்துகளுக்கான அங்கீகாரம், ஆய்வு உள்ளிட்டவைகளை ஆயுஷ் அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்நிலையில் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர் உள்ளிட்டவைகளை கொரோனா தடுப்புக்காக அரசு சார்பில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்தில் மனு
இதனிடையே மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கரோனா நோயிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்க செய்யும்'' எனக் கூறியிருக்கிறார்
உத்தரவிடக்கோரி
இந்த சித்த மருந்தான மூலிகை பொடியை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்கக்கோரி அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சித்த மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என வினவினர்.
நீதிபதிகள் கவலை
மேலும், ஆங்கில மருத்துவ லாபி இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என அச்சம் ஏற்படுவதாக கவலை தெரிவித்தனர். அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி மனு மீது மத்திய மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.