ஆங்கிலத்தை அகற்ற மத்திய அரசு தந்திரம்: சு.வெங்கடேசன் கண்டனம்! சாவர்க்கர் மாதிரி.. சீறும் சித்தராமையா
மதுரை: ‛‛ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது இந்தியை தவிர பிற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதற்கான மத்திய அரசின் தந்திரமேயாகும். இந்த தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்'' என மதுரை எம்பி சு வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் இந்து மொழி கொள்கைக்கு இந்தி திணிப்பு என காலம் காலமாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி தென்இந்திய மாநிலங்களிலும் இந்தி மொழிக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது. இதனால் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கும் தமிழகம், கர்நாடகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு
மும்மொழி கொள்கையும் ஒரு வகையில் இந்தி திணிப்பு தான் என பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் சூளுரைத்தன. இதனால் இந்தி மொழி விஷயத்தில் மட்டும் மத்திய பாஜகவுக்கு, தென் இந்திய மாநிலங்களுக்கும் இடையே உடன்பாடு இல்லை. சமீபத்தில் இது பெரும் பேசும்பொருளான நிலையில் அப்படியே அமுங்கியது.

மாற்று மொழியாக இந்தி
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, ‛‛அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக கொண்டு வர வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்'' என்றார்.

சு வெங்கடேசன் எதிர்ப்பு
இதற்கு தமிழகம், கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அரியனைணயில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே தான். இந்தியை தவிர பிற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுவே மத்திய அரசின் தந்திரமாக உள்ளது. இந்த தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் '' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அவர் Tamil, Hindi ஆகிய டேக்குகளுடன் பதிவிட்டுள்ளார்.

சித்தராமையா கண்டனம்
இதுபற்றி கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தற்போது எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா கூறுகையில், ‛‛இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியல் லாபத்துக்காக தனது தாய் மொழியான குஜராத்தியை புறக்கணித்து இந்தியை ஆதரித்து சொந்த மாநிலத்துக்கு அமித்ஷா துரோகம் செய்கிறார். காந்தி பிறந்த மாநிலத்தை சேர்ந்த அமித்ஷா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியை பயன்படுத்தி உதவி செய்த சாவர்க்கர் போல் நடந்து கொள்கிறார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை. இந்தியை திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும்'' என கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications