“உறுதியா இருக்கேன்..” பின்வாங்காத சவுக்கு சங்கர்! நீதித்துறையில் ஊழலா? ஐகோர்ட் நீதிபதிகள் முன்பேச்சு
மதுரை: நீதித்துறையில் ஊழல் படித்திருப்பதாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள், காவல்துறை, நீதித்துறை, அரசியல் கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். யூடியூப் பேட்டிகள் மூலமாக சமூக வலைதளங்களில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவை தொடர்ந்து "திமுக ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?" என்று கேள்வி எழுப்பி சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார்.
இதனை அடுத்து 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்திடக்கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
இதனை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர், "மாரிதாஸ் வழக்கை விசாரித்தபோது அழகர் கோயிலில் காலை 6 மணிக்கு யாரை சந்தித்தீர்கள்?" என்று ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார். அடுத்த சில நாட்களில் ஒரு யூடியூப் சேனலில் நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாகவும் அவர் பேசி இருந்தார்.
10 ரூபா தானா? ரொம்ப கம்மி.. புதிய தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்க -ஹைகோர்ட் ஆர்டர்
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், பதில்மனு தாக்கல் செய்திட கால அவகாசம் கோரினார்.
எதன் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோ அந்த வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "நீங்கள் கேட்கும் வீடியோக்கள் உங்களிடமும் இருக்கும். நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக நீங்கள் தெரிவித்த கருத்து உண்மையானதா?" என்று கேள்வி எழுப்பினர்.
உடனே சவுக்கு சங்கர் தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். வேறு வழக்கறிஞர்களை வைத்து வாதாடினால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும் சூழல்நிலை ஏற்படும் என்பதால் தானே வாதாட விரும்புவதாக விளக்கமளித்தார். சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமிக்க விருப்பம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தன்னுடைய சார்பில் என்.ஆர்.இளங்கோவனை நியமிக்க விரும்புவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.