என் விசுவாசம் இபிஎஸ்-க்கு தான்.. ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்தால் வாய்ப்பு.. செல்லூர் ராஜூ பரபர
மதுரை: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஓ. பன்னீர் செல்வம் வருத்தம் தெரிவித்தால் கட்சியில் மீண்டும் ஏற்றுக்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டதோடு, அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கு நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல்போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இரு தரப்பும் மீண்டும் இணைய சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

செல்லூர் ராஜு பேச்சு
இந்த நிலையில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவிபெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் கே.ராஜு கூறுகையில், அதிமுகவில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கினார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன்.

வன்முறை பற்றி கருத்து
தம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது.

இணைப்புக்கு அழைப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம். ஒபிஎஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை.
யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஒபிஎஸ் புரிந்துகொள்ள வேண்டும், அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை. அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர்.

அதிமுகவுக்கு இழப்பா?
ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திர நாத்தை கட்சியில் இருந்து நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்களின் பலமே அதிமுக என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications