தமிழ்நாடு என்ன சரணாலயமா? சீசனுக்கு மட்டும் வந்துட்டு செல்ல.. பிரதமர் மோடியை விளாசிய ஸ்டாலின்
மதுரை: தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? என்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மோடியை விமர்சித்து பேசினார்.
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்கு கோரி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி இந்த நாட்டிற்குச் செய்தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார்! எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ் - கல்புர்கி கொல்லப்பட்டதை மவுனமாக வேடிக்கை பார்த்தார்! மதவெறியர்களின் வன்முறையையும் - கொலைகளையும் - தாராளமயமாக்கினார்! இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது!
இப்போது புதிதாக என்ன சொல்கிறார் பிரதமர்? நாங்கள்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்தோமாம்! எவ்வளவு பெரிய பொய்! அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு - என்று சொல்லுவார்களே! அதுபோன்றுதான் இருக்கிறது. பா.ஜ.க. தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தடுத்த திட்டங்களைப் பட்டியல் போடலாமா?
தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க அன்னை சோனியா - பிரதமர் மன்மோகன் சிங் - முத்தமிழறிஞர் கலைஞர் - ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கினார்களே!
ஏன், பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டித் தராமல் தமிழ்நாட்டிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே! இந்த எய்ம்ஸ் உடன் அறிவித்த, மற்ற பா.ஜ.க. ஆளும் மாநில எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம், பயன்பாட்டிற்கு வந்துவிட்டதே. ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வரவில்லை.
நாங்கள் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா மட்டும் திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்! பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த நிதிக்குக் கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைப் 'பிச்சை' என்று சொல்லி ஏளனம் பேச வைக்கிறார்கள்!
இந்த இலட்சணத்தில். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்! தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் செய்யப்பட்ட நன்மைகளையும், திட்டங்களையும் பட்டியல் போட்டால், ஒரு நாள் முழுவதும் அந்தச் சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்க முடியும். சில சாதனைகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
பிரதமர் அவர்களே! குறித்துக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது. 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அன்னைத் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம். திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தோம்.
நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் மேம்பாலங்கள், சாலைகள் என்று 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய்க்குத் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம். நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கப்பட்டது.
இன்னும் நிறைய இருக்கிறது. பிரதமர் மோடியால் இப்படி பட்டியல் போட முடியுமா? தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?
நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது? நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன் உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications