2ஆம் தலைநகரம் மதுரை? ஏங்க அவரு சொன்னாரு! என்கிட்ட கேட்கிறீங்க! அமைச்சர் கே.என்.நேரு டென்ஷன்!
மதுரை: மதுரையை 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திடீரென டென்ஷன் ஆகிவிட்டார்.
ஏங்க அவரு சொன்னாரு, என் கிட்ட கேட்கிறீங்க என பக்கத்தில் நின்ற அமைச்சர் மூர்த்தியை கை காட்டிய கே.என்.நேரு, இதெல்லாம் முதலமைச்சர் ஆலோசனை செய்து அறிவிக்க வேண்டிய விஷயம் எனக் கூறி நழுவிக்கொண்டார்.
இதனிடையே மதுரையை 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து அமைச்சர் மூர்த்தியும் கோபம் அடைந்தார். இருப்பினும் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அந்த செய்தியாளரையே பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.
மதுரையை 2ஆம் தலைநகரம் என்றும் தாம் சொல்லவில்லை என்றும் 2 ஆம் தலைநகரை போல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று தான் கூறியதாக அமைச்சர் கே.என்.நேரு ஒரு விளக்கம் கொடுத்தார்.
மதுரையை பொறுத்தவரை வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக வரும் புகார்களை பரிசீலித்து இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் அதன் மீதான நிதி ஆதாரத்தை பெற்ற பிறகு பணிகள் தொடங்கும் எனவும் உறுதியளித்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், மதுரையை அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வரும் வேளையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1191 குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நேரு கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications