பச்சை பச்சையாய் வீடியோ எடுத்த பாஜக அண்ணாமலை..நாக்கு அழுகி விடும்! போலீசுக்கு போன டாக்டர்.சரவணன்..!
மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு அதிமுக கூட்டணி உடைந்த நிலையில், அண்ணாமலை பேச்சின் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி பிளவு ஏற்பட்டதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இடை இடையே அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவழ்ந்து, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என கொந்தளித்துப் பேசினார்.
அண்ணாமலை இப்படி பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தொண்டர்கள் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். நேற்று நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்," அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடும் அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவமானப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேசியுள்ளார்.
கடந்த 25.08.2024-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கெட்ட எண்ணத்துடன் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசி அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அசிங்கப்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். மேலும் எங்களது கட்சியையும் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் அவர்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
எனவே தொடர்ந்து எங்களது கழகத்திற்கும் கழகத்தின் பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அசிங்கப்படுத்தும் கெட்ட எண்ணத்தொடனும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் மேற்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன்,"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். 51 ஆண்டுகள் கடந்து அதிமுக ஆலமரம் போல செயல்படுகிறது, தமிழகத்தில் அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது, சாமானிய மக்களுக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே இடம் உள்ளது, பாஜக என்பது மழை பெய்த உடன் முளைக்கும் காளான் போன்றது.
அண்ணாமலை பச்சை மையில் கையெழுத்து போடுவது மட்டுமல்லாமல் பச்சை பச்சையாய் வீடியோ எடுத்தவர். பாஜக என்பது வீடியோ கட்சி. அண்ணாமலை அரசியல் வியாபாரி. அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை தனிநபர் விமர்சனம் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி உள்ளார். அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டன் வெகுண்டு எழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு ஏற்படும்.
அதிமுக தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைன் புகார்கள் அளிக்க உள்ளனர். அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரி, தமிழகத்தில் அண்ணாமலை வெறுப்பை விதைத்து வருகிறார். பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தமிழிசை, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த நல்ல அரசியல் அண்ணாமலை செய்யவில்லை. அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும்" என்றார்.













Click it and Unblock the Notifications