பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி.. 16 காளைகளை அடக்கிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசு!
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தமாக 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், சிறந்த காளையாக குலமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு அதிக எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அதில் 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றுள்ளனர்.

அதேபோல் மது அருந்தியது, எடை குறைவு, எடை அதிகம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட காரணங்களால் 24 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் 9 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இறுதிச்சுற்றில் மட்டும் சிறப்பாக ஆடிய 61 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதன் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர்.
தொடர்ந்து குலுக்கல் முறையில் 2வது இடம் பிடித்த பிரபாகரனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், டிவி, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளையாக குலமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு டிராக்சர் பரிசாக அளிக்கப்பட்டது. அதேபோல் மாலை 6 மணிக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி மின் விளக்குகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதனால் நாளை நடக்கவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கூடுதலாக காளைகள் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications