கீழடி உண்மையை வெளியிட முன்வர மாட்டார்கள்.. எதிரி யாரென்று தெரிகிறதா? கொந்தளித்த சு.வெங்கடேசன்!
மதுரை: 2023ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு இதுவரை வெளியிடாமல், திருப்பி அனுப்பியிருப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று கூறியுள்ள அவர், புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சி தமிழர்களின் பாரம்பரிய பொக்கிஷமாக இருந்து வருகிறது. 2,200 ஆண்டுகளுக்கு முன்பாக வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்தன. தற்போது கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

கீழடி 10ம் கட்ட அகழ்வாராய்ச்சி
இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட தமிழ் எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன்கள் என்று 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சு.வெங்கடேசன் கண்டனம்
இந்த நிலையில் கீழடியில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் திருப்பி அனுப்பி உள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக.
உறுதி அளித்த மத்திய அரசு
கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது "விரைவில் வெளியிடப்படும்" என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது.
மத்திய தொல்லியல் துறை
ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மே 27ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. கீழடியின் உண்மைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.
பாஜகவின் பணி
"தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்" என்றென்றும் எதிரிகள் யார் என்பதை மத்திய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.
தமிழர்களின் தாய்மடி
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல.. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது! அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. "கீழடி தமிழர்களின் தாய்மடி" என்ற உண்மையை உரக்கச்சொல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications