Madurai North: மதுரை வடக்குத் தொகுதி யாருக்கு? ரெடியாகும் லிஸ்ட்.. முட்டிமோதும் நிர்வாகிகள்!
மதுரை: மதுரை வடக்குத் தொகுதியை கட்டாயம் கேட்டுப்பெறுவோம் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம்தாகூர் கூறிவருவதால் அந்த தொகுதி பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய நிலவரம் என்ன? தொகுதியை கைப்பற்ற யார் யார்? இடையே போட்டி நிலவுகிறது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
மதுரை வடக்கு சட்டசபை தொகுதியை பொறுத்தவரை சிறுபான்மையினர், யாதவர், பிள்ளைமார், முதலியார், முக்குலத்தோர், சவுராஷ்டிரா என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக வசிக்கும் பகுதியாகும்.

இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் திமுகவை சேர்ந்த கோ.தளபதி அண்மையில் காங்கிரஸ் குறித்து தெரிவித்த கருத்துக்கள் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
மாணிக்கம் தாகூர் குறி
கோ.தளபதியின் பேச்சை திமுகவினர் சிரித்துவிட்டு கடந்து சென்றாலும், காங்கிரஸ் வட்டாரம் தன்மானப் பிரச்சனையாக பார்க்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் அவரது ஆதரவு வட்டத்தினர் மதுரை வடக்கு தொகுதியை கார்கேவிடம் பேசி எப்படியும் நாம் வாங்கிவிட வேண்டும் என காய் நகர்த்தி வருகின்றனர்.
ஒரு வேளை மதுரை வடக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் கோ.தளபதிக்கு சீட் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையையாவது முன் வைப்போம் என காங்கிரஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
மாணிக்கம் தாகூர் கேட்பது ஏன்?
மாணிக்கம் தாகூரின் மாமனார் பெயர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன். இவர் கடந்த முறை மதுரை மாவட்டம் மேலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதனால் மாமனாருக்காக மணிக்கம் தாகூர் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் மதுரை வடக்கு தொகுதியை பெற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இதனை அறிந்து தான் மதுரை வடக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் திமுகவின் கோ தளபதி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தற்போது மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்காக திமுகவுக்காக என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பத்துக்கு மாணிக்கம் தாகூர் தான் மெயின் காரணம் என்பதால் அவரது முயற்சி திமுகவிடம் பலிக்காது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
திமுகவில் 2 பேர் போட்டி
இந்தச் சூழலில் திமுக தரப்பில் மதுரை வடக்குத் தொகுதியில் களமிறங்க 2 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வான கோ.தளபதியும், இளைஞரணி நிர்வாகியுமான சவுந்தரும் கடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உதயநிதியின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பதால் அவரது ஆசியுடன் சீட் வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கையில் தொகுதிக்குள் ஆக்டிவாக இளைஞர்கள் பட்டாளத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார் சவுந்தர் என்ற ஏ.ஆர்.சவுந்தர் ராஜன்.
இன்னொருபுறம் இந்த முறையும் நான் தான் போட்டியிடுவேன் என்ற நம்பிக்கையில் கோ.தளபதி எம்.எல்.ஏ. தேர்தலுக்கு ரெடியாகிவிட்டார். இதனால் மதுரை வடக்குத் தொகுதியில் யாருக்கு சீட் என்ற எதிர்பார்ப்பு அந்த தொகுதிக்குள் எகிறத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications