அபார்ட்மென்ட் முதல் விடுதிகள் வரை.. மதுரையை சுற்றி நடக்கும் மாற்றம்.. எகிறும் ரியல் எஸ்டேட் மதிப்பு!
மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. பிபி குளம் பகுதியில் மிகப்பெரிய 9 மாடி அபார்ட்மென்ட், தோப்பூர் பகுதியில் 5 நட்சத்திர விடுதி, அழகர் கோயில் பகுதியில் நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மதுரைக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விடவும், திமுக பல்வேறு அடையாளங்களை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூர் பகுதியில் அமைந்தது. இன்னொரு பக்கம் திருமங்கலம் பகுதியில் அதிகரித்து வரும் ஐடி நிறுவனங்களின் முதலீடுகள்.

ஏற்கனவே திருமங்கலம் நெடுஞ்சாலையில் ஜோஹோ நிறுவனம் தனது கிளையை தொடங்கியுள்ள நிலையில், அதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகளால், அருப்புக்கோட்டை சாலை மூடப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்தப் பக்கம் கீழடி அருங்காட்சியம், ஜல்லிக்கட்டு ஸ்டேடியம், வேலுநாச்சியார் மேம்பாலம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோரிப்பாளையம் மேம்பாலம், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள், டைடல் பார்க் கட்டுமான பணிகள் உள்ளிட்ட மதுரைக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பின் மதுரை முக்கியமான மாவட்டமாக முன்னேறி வருகிறது. மதுரையின் அனைத்து திசைகளிலும் அரசு மற்றும் தனியார் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனால் மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. தமிழக அரசுக்கான நிலம் கிடைக்காமல் சில முதலீடுகளை செய்ய முடியாமல் இருப்பதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
இந்த நிலையில் மதுரையின் பகுதிகளில் நட்சத்திர விடுதிகளும், புதிய அபார்ட்மெண்ட் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அழகர் கோயில் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக தனியார் நிறுவனம் தரப்பில் நட்சத்திர விடுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 4 பிளாக்குகளாக உருவாகி வருவது தெரிய வந்துள்ளது. அதேபோல் இரு தனியார் நிறுவனங்கள் இணைந்து விமான நிலையப் பகுதியில் பிரம்மாண்ட அபார்ட்மென்ட் கட்டி வருகின்றன்ர்.
இது தென் தமிழ்நாட்டின் முதல் 5 ஸ்டார் அபார்ட்மென்ட்டாக உருவாகி வருகிறது. அதேபோல் பிரபலமான விஷால் குரூப் சார்பாக பிபி குளத்தில் மிகப்பெரிய 9 மாடிகள் கொண்ட அபார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது. இது கிரிக்கெட் ஸ்டேடியமும் அமைக்கப்படுவது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் உருவாகி இருக்கும் சூழலில், இது மதுரையின் 2வது கிரிக்கெட் ஸ்டேடியமாக பார்க்கப்படுகிறது.
இதனால் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் வண்டியூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.4 லட்சமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரமோ ஒரு சென்ட் ரூ.14 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஆணையூர், சிந்தாமணி, மதுரை ரிங் ரோடு, கீழடி பகுதிகளிலும் நிலம் விலை அதிகரித்துள்ளது. தோப்பூரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்த பின், ஒரு சென்ட் ரூ.7 லட்சம் வரை செல்லும் என்றும் சிலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications