மதுரைக்கு வரும் டைடல் பார்க்.. உடைந்து கிடக்கும் ரோடுகள் இனி பளபளக்குமா.. செம எதிர்பார்ப்பில் மக்கள்
மதுரை: மதுரையில் டைடல் பார்க் அமைய உள்ள நிலையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற பெயரில் தென்மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிகையில் மதுரை மாட்டுத்தாவணியில் 'டைடல் பார்க்' அமைக்கப்பட உள்ளது என அறிவித்தார்.
தொடர்ந்து, மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து 5 ஏக்கரில் 'டைடல் பார்க்' அமைக்கப்பட உள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டைடல் பார்க் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் வரவேற்பு
மதுரையில் டைடல் பார்க் அமையவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எம்என்சி நிறுவனமான ஜோஹோ மதுரையில் கிளையை கட்டி வருகிறது. தற்போது டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இனி வேலை தேடி பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

தொழில் வளர்ச்சி
அதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி என்பது மிகவும் குறைவே. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தை போலவோ, சேலம் உருக்காலையை போலவோ, கடலூரில் உள்ள என்எல்சி போன்றோ மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. இதனால் மதுரை மாநகராட்சியாக பெரியளவில் வளர்ந்தாலும், எல்காட் தவிர்த்து வேறு பெரிய கட்டமைப்புகள் தொழில் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்படவில்லை.

உட்கட்டமைப்புகள் மேம்படுமா?
இந்த நிலையில் தான் மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற செய்தி இளைஞர்களுக்கு உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. ஆனால் தொழில் வளர்ச்சி பெருகும் வகையில், மதுரையில் உட்கட்டமைப்புகள் இதுவரை செய்யப்படாமலேயே உள்ளது. மதுரையின் முக்கிய பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், தெப்பக்குளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையிலேயே உள்ளன. இவற்றை சரி செய்ய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே போதுமானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலை வசதிகள்
அதேபோல் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளான கோரிப்பாளையத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மாட்டுத்தாவணி பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கும் சூழலில், அங்கேயே டைடல் பார்க் அமைவதால், சாலையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல்களும் எழுந்துள்ளன.

மின்சார ரயில் சேவை
சென்னை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை போல், கோவையில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ திட்டம் போல் மதுரையிலும் மின்சார ரயில் சேவை கொண்டு வரப்பட வேண்டும் என்ற மதுரை மக்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக உள்ளன. மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டால் சென்னை, கோவையை போல் மதுரை மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் அசைக்க முடியாத சக்தியாக திகழும். இவையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications