30 நிமிடத்தில் 134 வகை உணவுகள்.. இந்தியன் புக் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற மதுரை பெண்.. அசத்தல்!
மதுரை: திருமங்கலத்தில் 30 நிமிடத்தில் 134 வகை உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் பெண் ஒருவர் இடம்பிடித்தார். சைவ அசைவ உணவுகளை அரை மணி நேரத்தில் அசாத்திய திறமையால் தயார் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
Recommended Video
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலமாக அரை மணி நேரத்தில் 130 வகை உணவுகளை தயார் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சாதனைக்காக நேற்று திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகளை செய்தார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகியின் மேற்பார்வையில் அசைவ, சைவ உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

பல விதம்
விதவிதமான தோசை, இட்லி , ஊத்தப்பம், ஆம்லேட், ஆஃபாயில், வடை, பஜ்ஜி பல்வேறு வகைகளில் பனியாரம் மற்றும் கொழுக்கட்டைகள், புட்டு, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு மற்றும் குளிர்பானங்கள், ஜஸ்கிரீம், கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உணவு மற்றும் சைடிஸ் தயார் செய்தார்.

அரை மணி நேரத்தில் பரபரப்பாக
அரைமணி நேரத்தில் பரபரப்பாக தனியாளாக செயல்பட்டு இந்த உணவு வகைகளை தயார் செய்த இவர் 30 நிமிடத்தில் நான்கு வகை உணவுகள் கூடுதலாக அதாவது மொத்தம் 134 வகையான உணவுகளை தயாரித்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ஒரு மணி நேரத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் 172 வகையான உணவுகள் தயாரித்ததே சாதனையாக இருந்தது.

சாதனை முறியடிப்பு
அந்த சாதனையை இந்திரா ரவிச்சந்திரன் முறியடித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்டினர். இது குறித்து தகவல் தெரிவித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன மேலாளர் இதற்கு முன்னர் ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகளை தயார் செய்து சாதனையாக இருந்தது அதை முறியடிக்கும் விதமாக அரை மணி நேரத்தில் 134 வகையான உணவுகளை தயாரிப்பு சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

என்ன திறமை
இது தொடர்பாக தெரிவித்த இந்திரா ரவிச்சந்திரன் "தான் அடிப்படையிலேயே சமையல் வேலைகளை வேகமாக செய்து முடிப்பேன். இதை பார்த்த எனது கணவர் ரவிச்சந்திரன் என்னுடைய திறமையை பார்த்து சமையல் கலையில் ஏதாவது சாதனை புரியலாமே என ஊக்கம் அளித்ததால் நான் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டேன்.

கலை நன்றாக வளரும்
இதற்காக பல நாட்கள் பயிற்சி செய்த பின்னரே இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தேன் தெரிவித்தார். மேலும் இந்த சாதனைக்கு எனது குடும்பத்தார், அவர்கள் அனைவரும் ஊக்கம் அளித்ததாக" தெரிவித்தார். சமையல் என்பது கலை, அதை சாப்பிடும்போது எப்படி ரசிக்கிறோமோ அது போல் செய்யும் போது ரசித்து செய்தால் அந்த கலை நன்றாக வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications