வன்னியருக்கான 10.5% இடஒதுகீடுக்கு எதிராக ஓரணியில் 115 ஜாதிகள்....திமுக அரசுக்கு நெருக்கடி?
மதுரை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த 115 ஜாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இந்த உள் இடஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது வன்னியர் உள் இடஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவே செல்ல முடியாத நிலையும் இருந்தது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைந்தது. இதனால் வன்னியர் உள் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுமா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்தது. தற்போது கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் சற்று அடங்கியே இருந்தது.

மதுரையில் ஆலோசனை
இந்த நிலையில் மதுரையில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 115 ஜாதிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் வன்னியருக்கான உள் இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடிவு
இதனால் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். அத்துடன் 115 ஜாதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். இதனால் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் தலைதூக்கியுள்ளது.

திமுக அரசு என்ன செய்யும்?
ஏற்கனவே நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தை திமுக எப்படி கையாளப் போகிறது? என்பது எதிர்பார்ப்புக்குரியதாகிவிட்டது.












Click it and Unblock the Notifications