மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்.. மோடி உறுதி.. திமுக, காங்கிரஸ் மீது கடும் தாக்கு
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
மதுரை பாண்டி கோவில் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நமக்கான கண்ணியத்தை திமுக உறுதி செய்யாது. சட்டம் ஒழுங்குச் சூழல் மீண்டும் சீர்கெட்டுப் போகும். அவர்கள் குடும்பத்தில் இருந்த சிக்கலை பயன்படுத்தி மதுரை நகரத்தை இது ஒரு வன்முறை நகரமாக, மாஃபியா நகரமாக, ஒரு கொலை நகரமாக தோற்றத்தை உருவாக்கினார்கள்.
பெண்களுக்கு மரியாதை
மதுரை மக்கள் அமைதியை விரும்புபவர்கள். மதுரை நாம் எப்படி பெண்கள் சக்தியை மதிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்கும் ஒரு நகரமாக இருக்கிறது. இந்த மதுரையில்தான் மதுரை மீனாட்சி அம்மன் வழிபடுகிற காட்சியைப் பார்க்கிறோம். இந்த மதுரையில், கண்ணகி அம்மனுக்கு நாம் கொடுக்கிற மரியாதையை பார்க்கிறோம். ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் ஆகியோருக்கு கொடுக்கின்ற மரியாதையை பார்க்கிறோம். அதனால்தான் எனது தலைமையிலான அரசாங்கம் பெண்கள் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது. சுவச் பாரத், உஜ்வலா திட்டங்கள் பெண்களின் நலன் காப்பவை.
ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டை யார் தடை செய்தார்கள் என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன். ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்.. அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அவர் சொன்னார் ஜல்லிக்கட்டு என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறையாம். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
காட்டுமிராண்டி விளையாட்டு என்றனர்
2016ம் ஆண்டு தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது. 2016-17 தமிழகத்தினுடைய சாமானிய மக்களும் இந்த ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று சொன்ன போது அவர்களது மனதை அறிந்து நடவடிக்கை எடுத்தேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டை கொண்டுவர ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வரும்போது நான் அதை உடனடியாக சரி செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுத்தேன்.
வேலையே செய்யாமல் குறை சொல்வோர்கள்
திமுக, காங்கிரஸ் ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள். வேலையே செய்யாமல் இருப்பது.. அடுத்தவர் வேலை செய்தால் குறைத்து பேசுவது என்ற விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டுமென்று நீண்ட காலம் ஆட்சியிலிருந்தபோது அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாங்கள்தான் அதை நினைத்தோம். விரைவாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மதுரையில் எய்ம்ஸ் அமையும்.
எய்ம்ஸ் மருத்துவமனை
அதனால் இந்த பகுதி மக்களுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை கிடைக்கும். இதற்கான, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்வேன் என்பதை மக்களுக்கு உறுதியாக சொல்கிறேன். 3 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்கிற விஷயத்தில் நமது அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறது. அது மாத்திரமல்ல, மருத்துவ படிப்புக்கான சீட் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.