பாலமேடு ஜல்லிக்கட்டு: திமிறும் காளைகள்.. தாமதமாக வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! சலசலப்பு!
மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைப்பதாக இருந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர தாமதம் ஆனதால் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக தொடங்கியது. கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பிறகு வந்த உதயநிதி ஸ்டாலின், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், கரும்பு, புத்தாடையுடன் நினைவுக்கு வருவது தமிழர்களின் மற்றொரு அடையாளமான ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியை இன்னும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துளார். 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் வழங்கப்பட உள்ளது. சிறந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் கூடிய நாட்டு இன பசுமாடு வழங்கப்பட உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்கள், தங்க காசு கட்டில் பீரோ மெத்தை ரொக்க பணம் என எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
வாடிவாசல் கேலரி அமைத்தல் மற்றும் காளைகள் சேகரிப்பு மையம், பார்வையாளர் அமர்ந்து பார்க்கக்கூடிய கேலரி துணை முதல்வர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரத்தியேக மேடை வீரர்கள் மருத்துவ குழு அமர்வதற்கான இடம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம் மற்றும் குடிநீர் கழிவறை அனைத்து பணிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட ஸ்கோர் போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி திரையில் வீரர்கள் அடக்கிய காளைகளின் விவரம் திரையிடப்படுகிறது.
இந்த உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆண்டாண்டு காலமாக காலை 7:45 மணிக்குள் பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி விடும். இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தாமதமானதால் ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக தொடங்கி உள்ளது.
காளைகள் அவிழ்த்து விட நேரம் ஆனால், மாலைக்குள் எல்லா காளைகளையும் அவிழ்க்க முடியாது என்பதால் சலசலப்பு நிலவியது. இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு முன்பே ஜல்லிக்கட்டு தொடங்கி காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். வழக்கமாக மாலை 5 மணி அளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெறும். நாளை நடைபெறுகிற உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications