இனிமே பணம் கேட்டா அவ்வளவு தான்! ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை! விடுதியில் மாண்ட மாணவன்!
மதுரை : திருமங்கலம் அருகே தனியார் கல்லூரி விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே தனியா பொறியியல் கல்லூரியில் விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவரின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயிலுக்கு சென்ற கண்ணம்மா.. பாரதிக்கு ஊர்க்காரர்கள் கொடுத்த தண்டனை.. எதிர்பாராத சீரியல் கடைசி முடிவு
கல்லூரி மாணவன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான காமராஜர் பொறியியல் கல்லூரியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த உரக்கடை உரிமையாளர் தனசேகரன் - முத்துலட்சுமி தம்பதியினரின் இளையமகன் வினோத்குமார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.. கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் வினோத்குமார் டென்னிஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி விடுதி அறையில் உறங்கிக் கொண்டிருந்த வினோத்குமார் காலையில் அறையில் இல்லாததால் உடன் இருந்த நண்பர்கள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவருடன் தங்கி இருந்த மாணவர்கள் தேடிவந்த நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள 115 வது அறையில் கதவு உள்பக்கமாக பூட்டி உள்ளதை அறிந்து கதவைத் தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சகமாணவர்கள் கல்லூரி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்து வந்த விடுதிக்காப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவர் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ஆன்லைன் ரம்மி
மாணவன் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து மாணவரின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வினோத்குமார் அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் பல்வேறு காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளார்.
பெற்றோர் கண்டிப்பு
அடிக்கடி பணம் வாங்கியதால் பெற்றோர்கள் வினோத் குமாரை தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத்குமார் பணம் கையில் இல்லாததால் லோன் ஆப் மூலம் கடன் பெற்று பிரீ பையர் கேம் விளையாடியதாக சொல்லப்படுகிறது. லோன் ஆப் மூலம் கடன் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் வினோத் குமார் மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வினோத் குமார் கல்லூரி விடுதியில் உள்ள ஒன்பதாவது எண் அறையில் உள்ள சக மாணவர்களிடம் புதன்கிழமை வெகு நேரம் பேசி விளையாடி மகிழ்ந்துள்ளார்.
என்ன காரணம்?
தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை பேசிய பிறகு அனைவரும் உறங்கச் சென்று விட்டனர். பின்னர் மீண்டும் காலை எழுந்து பார்த்தபோது வினோத் குமாரை காணாமல் தேடி வந்த நிலையில் 115 ஆவது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவர் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வினோத்குமாரின் தந்தை தனசேகரன் காவல்துறையில் அளித்த புகாரில் வினோத்குமார் ஆன்லைன் விளையாடி வந்ததை கண்டித்ததாக போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் வேதனை
அவர் அளித்த புகார் அடிப்படையில் வினோத்குமாரின் செல்போனை வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு மூலம் ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது வரை தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய இந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரி விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.