நாங்க லோக்கல்..! டோல் கேட் கட்டணம் கொடுக்க முடியாது! கிளர்ந்து எழுந்த மதுரை மக்கள்!
சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று கூறி மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்குவழிச்சாலையில் நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

உள்ளூர் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தை கட்டமாட்டோம் என இப்பகுதி பொதுமக்கள் மறுத்து வருவதோடு அவ்வப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் உள்ளூர்.வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் எனக் கோரி சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் காரணமாக சுங்கச்சாவடி வழியாக தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications