ஒரே விமானம்.. ஒன்றாக வந்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்! குவிந்த பிடிஆர், ஓபிஎஸ் தொண்டர்கள்
மதுரை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தடைந்ததால் அவர்களை வரவேற்க 2 தலைவர்களின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் கூடினர்.
சென்னையிலிருந்து இன்று மதியம் மதுரைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டார்.
அதே விமானத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.

பாதுகாப்பு
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்பதற்காக திமுக தொண்டர்களும், ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் அதிகளவில் மதுரை விமான நிலையத்தில் கூடினர். 2 தலைவர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலான போலீசார்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

கூடுதல் போலீஸ்
ஏற்கனவே பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது மதுரை விமான நிலையத்தில் பாஜக ஆதரவாளர்கள் காலனி வீசிய சம்பவத்தை தொடர்ந்து அவருக்காக கடந்த சில வாரங்களாக கூடுதல் போலீசார்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். இரண்டு கட்சியினரும் ஒரே நேரத்தில் கூடும் நிலை உள்ளதால் மோதல் ஏற்படாத வகையில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

குவிந்த தொண்டர்கள்
தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வெளியே வந்த ஓபிஎஸ் க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு வந்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுகவினர் வரவேற்று பின்னர் தொடர்ந்து இருவரும் கார் மூலம் அவர்களது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றனர். சமீபத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் என்ன வேலை?
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி கூடும் சட்டப்பேரவைத் தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல் அதிமுக உட்கட்சிப்பூசல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் மதுரை திரும்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications