குளமாக தேங்கிய மழை நீர்.. உண்ணாவிரதம்..மேயருக்கு எதிராக மல்லுக்கட்டும் அமைச்சர் மூர்த்தி
மதுரை: குளம் போல மழை நீர் தேங்கியுள்ளதால் மதுரை ஐயர் பங்களா, ஜெய்ஹிந்தபுரம் வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ள நீரை அகற்றாவிட்டால் மேயருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. ஆனால், நேற்று காலையில் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலுக்கு மேல் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
பலத்த மழையால் தாழ்வான சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் மதுரை பெரியார் பஸ் நிலையம், ரயில் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழையால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தன. பின்னர் படிப்படியாக கொட்டும் மழையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

குளமாக தேங்கிய வெள்ளநீர்
மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. கனமழை காரணமாக ஜீவாநகரை அடுத்துள்ள தென்றல் நகர் என்ற பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து குளம் போல காட்சியளிக்கிறது.

குடியிருப்பாளர்கள் சிரமம்
தென்றல் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இன்று வரை மழை நீர் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதிகள் மற்றும் சாலை வசதிகள் உட்பட எதுவும் செய்யப்படவில்லை, தேங்கியுள்ள நீரின் காரணமாக பாம்பு உள்ளிட்ட பல விஷ ஜந்துக்களையும் இப்பகுதியில் காண முடிந்தது.

நோய் தொற்று அபாயம்
மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் கலக்கும் அபாயமும், கொசுக்கள் தொல்லையும் எண்ணுக்கடங்காமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகமோ அல்லது வார்டு மாமன்ற உறுப்பினரோ இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு இந்த நிலை மீண்டும் தொடராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த தென்றல் நகர் வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

அமைச்சர் மூர்த்தி
ஐயர் பங்களா பகுதியில் வசித்து வருகிறார் மூர்த்தி. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் மிதந்து கொண்டு செல்கின்றன. அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் பின்னால் வெள்ள நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனையடுத்து ஐயர் பங்களா பகுதியை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி வெள்ள நீரை அகற்ற மாநகராட்சி மேயரிடம் கூறியுள்ளோம். உடனடியாக வெள்ள நீரை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார்.

மேயர் அமைச்சர் இடையே முற்றிய மோதல்
மதுரை மாநகர மேயர் பதவியை குறிவைத்து, ஏராளமான திமுக பிரமுகர்கள் காய்நகர்த்தி வந்தனர். இதில், இறுதியில் இந்திராணி என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டது.. இந்த பெயரை அறிவித்ததுமே ஏராளமான அதிருப்திகள் கட்சிக்குள் வெடித்தன. அமைச்சர் பி.மூர்த்தி வாசுகிக்காக முயன்று பார்த்தார், யாருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திராணி பெயரே இறுதியாக அறிவிக்கப்பட்டது. மேயர் பதவியேற்பு விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் யாருமே இந்த விழாவில் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். மேயர் இந்திராணி, அமைச்சர் மூர்த்தி இடையேயான மோதல் வெளிப்படையாக இன்றைய தினம் தெரியவந்தது.

எதிர்பார்க்காத மழை
மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை எதிர்பார்த்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications