சாத்தான்குளம் வழக்கு: 9 பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சிபிஐ முறையீடு.. ஐகோர்ட் கிளை போட்ட உத்தரவு!
மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு, கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ தரப்பு முறையீடு செய்துள்ளது. 9 குற்றவாளிகளும் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜராகினர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், தானே வாதிட உள்ளதாக முறையீடு செய்ய, "முதலில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யுங்கள்" என அறிவுறுத்தி விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் போலீஸ் கஸ்டடியில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இந்த 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கினால், தொடர்புடைய உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, தூக்கு தண்டனை வழங்கலாமா? அல்லது தண்டனையை குறைக்கலாமா? என உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த முறையீட்டில், குற்றவாளிகள் 9 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதிகள், உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது , உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, நீங்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கு கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வருகிற 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அப்போது, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர், தானே வாதிட உள்ளதாகவும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக உரிய ஆவணங்களை வழங்கவில்லை என நீதிபதிகளிடம் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் உங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு நகலை வைத்து முதல் கட்டமாக, இரட்டை தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யுங்கள் அதன் பிறகு, உங்களுக்கு தேவையான ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications