மொதல்ல மோடி, அமித்ஷா குடியுரிமையை நிரூபிக்கட்டும்.. அப்பறமா மக்கள் சமர்ப்பிக்கட்டும்.. சீமான்
சிஏஏ குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
மதுரை: "நான் இந்திய குடிமகனா என்று சான்று கேட்கிறியே.. நீ இது தெரியாமலேயே 72 ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்திட்டியா? நான் குடிமகனா இல்லையான்னு ஏன் இப்போ குழப்பம் வருது? முதல்ல மோடி, அமித்ஷா, பாஜக அமைச்சர்கள் இவங்க மொத்த பேரும் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்கட்டும், அதுக்கு பிறகு மக்கள் சமர்ப்பிப்பது குறித்து நாம அப்பறம் பேசுவோம்" என்று சீமான் காட்டமாக கூறியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன... குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டம், அதையொட்டி நடந்த தடியடி, வன்முறைகளை தொடர்ந்து, இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்து வருகிறது.
இதை பற்றி சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "சிஏஏவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்க.. நான் அதுக்கு பதில் சொல்கிறேன்" என ஆவேசமாக கேட்டிருந்தார்.
மதுரை
இந்நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்... அப்போது சிஏஏ குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது, "பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு இதை பார்க்கக்கூடாது, யார் வருங்காலத்தில் பாதிக்கப்படுவாங்கன்னு இதை பார்க்கணும்.. வருமுன் காப்போம்தான் இது.. இதான் வரும்ன்னு தெரியுது இல்லை?
பாதிப்பு வரும்
அசாமில் முதல் பெண்முதலமைச்சர் சையத் அன்வராவே பாதிக்கப்படறாங்களே... பாதிக்கப்படுவாங்க, அதனால எச்சரிக்கிறோம்... இப்போ கொரோனா வைரஸால யாருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்படல? ஆனா ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுது? இதை குறி வைச்சு நடத்தப்படுதுன்னு நமக்கு தெரியவேதான் இதை வேணாம்னு சொல்றோம்.
வரையறை
குடியுரிமை திருத்தசட்டத்தை ஏற்கவில்லை என்று 11 மாநிலங்களுக்கு மேல் சொல்லிவிட்டன. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரானது. எது குடியுரிமைக்கான சான்றிதழ் என்றே இன்னும் வரையறுக்கப்படவில்லை. பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்கான சட்டமே 1969ஆம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. எனக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளது என வைத்துக்கொள்வோம்.
குழப்பம்
என்னுடைய தாய், தந்தைக்கு எப்படி பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அப்படியென்றால் நான் இந்தியாவின் குடிமகன், என்னுடைய தாயும் தந்தையும் குடிமக்கள் இல்லை. இது எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது என்று பாருங்கள்"என்றார். சிஏஏ பாதிப்பு என்று நிரூபிப்பவருக்கு 1 கோடி பரிசு என கேட்டதற்கு, "இந்த நோட்டீஸை ஒட்டினாரே, அவர்தான் இச்சட்டத்தினால் முதலில் பாதிக்கப்படுவார்" என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆவணங்களை சமர்பிக்க மாட்டோம் என மற்ற கட்சிகள் முடிவெடுத்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
சான்று ஏன் கேட்கிறே?
அதற்கு, "மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எங்களுடைய ஆவணங்களை அளிப்போம்... ஆனால், இந்திய குடிமகன் என்பதை நிரூபிப்பதற்கான சான்றிதழை தரமாட்டோம்... மக்கள் தொகை கணக்கடுப்பு தருவோம்.. நான் இந்திய குடிமகனா என்று சான்று கேட்கிறியே.. நீ இது தெரியாமலேயே 72 ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்திட்டியா?
குழப்பம் வருது
நான் குடிமகனா இல்லையான்னு சொல்ல உங்களுக்கு நாங்க வாக்கு செலுத்தல.. குடிகளை வாழ வைக்கதான் வாக்கு செலுத்தி, அதிகாரத்தை தந்திருக்கோம். நான் குடிமகனா இல்லையான்னு ஏன் இப்போ குழப்பம் வருது? முதல்ல மோடி, அமித்ஷா, பாஜக அமைச்சர்கள் இவங்க மொத்த பேரும் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்கட்டும், அதுக்கு பிறகு மக்கள் சமர்ப்பிப்பது குறித்து நாம அப்பறம் பேசுவோம்" என்றார்.