அறையிலேயே உட்கார்ந்து கொண்டு விஜய் அரசியல் செய்வது சரியா? விடாமல் அட்டாக் செய்யும் செல்லூர் ராஜு
மதுரை: தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சகோதரர் விஜய்யை நாங்கள் திட்டவில்லை என்று கூறிய செல்லூர் ராஜு, கரூரில் 41 பேர் இறந்ததை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்த நடைமுறை தமிழக அரசியலுக்கு புதுசு என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தவெக தலைவர் விஜய்யை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவை அடிமைவாத ஊழல் கட்சி என்று விமர்சித்த நாள் முதலே, விஜய் மீதான அட்டாக் அதிகரித்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி, கரூரில் 41 குடும்பங்களை விஜய் அனாதையாக்கிவிட்டதாக விமர்சித்தார்.

இதனால் தவெக தொண்டர்கள் அதிமுகவுக்கு சோசியல் மீடியாவில் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில், பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வணிக வரித்துறை அமைச்சருடைய தொகுதிக்குட்பட்ட நகரப் பகுதிகளில் தான் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையை சுட்டிக்காட்டுகிறது.
மக்களுடைய பிரச்சனைகளை முதல்வர் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் மேற்கு தொகுதியில் உள்ள 10 பிரச்சனைகளை மனுவாக வழங்கி இருந்தேன். அதில் ஒரு பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளது. 9 பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவைப் போல தோல்வி கண்ட இயக்கம் எதுவும் கிடையாது.
முரசொலியில் உடன் பிறப்பே என்று கலைஞர் எழுதுவார். அந்த கடிதத்தின் மூலமே அந்த கட்சி வளர்ந்தது. அதேபோல் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் பனையூரில் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா? கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வரவில்லை.
மாநில அரசு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை.
கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். விஜய்யை சகோதரராகவே பார்க்கிறோம். விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர்.
அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். தொடர்ந்து ஓபிஎஸ் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications