திமுகவுக்கு தாவிய கோவை செல்வராஜ்.. பல கட்சிகளுக்கு தாவியவர்.. செல்லூர் ராஜு கடும் விமர்சனம்
மதுரை: திமுகவுக்கு தாவியுள்ள கோவை செல்வராஜ் பல கட்சிகளுக்கு தாவிவிட்டார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது : தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர்.
பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். ஒரு பக்கம் துர்கா ஸ்டாலின், ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு பக்கம் மருமகன் சபரீசன் இவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது.
எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர்..ராமர் கெட்டப்பில் அண்ணாமலை! போட்டோ ஷாப்பில் சிஎம் ஆக்கிய கோவை பாஜக!
சின்னம்
வழக்குகளால் சின்னம் முடங்கும் அபாயம் உள்ளது குறித்த கேள்விக்கு, அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை பெற்று தேர்தலில் வெற்றி பெறும். வழக்குகளைப் பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசவும் முடியாது. குஜராத் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டியும், நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பிரதமர் கொண்டு செல்கிறார் என்பதை குஜராத்தில் உள்ள தமிழர்கள் அறிந்து ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்.
கூட்டணி
அந்த பிரதிபலிப்பு எல்லா இடங்களில் இருக்குமா என தெரியவில்லை. கூட்டணி அமைவதை வைத்து தான் சொல்ல முடியும். இன்று வளர்ந்து வருகிற பாஜக அதிமுகவுடன் இணைந்தால் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அது அவர்களின் கையில் தான் உள்ளது. ஒபிஎஸ் அணியினர் திமுக செல்வது குறித்த கேள்விக்கு, படி தாண்டிய பத்தினியாக கோவை செல்வராஜ் உள்ளார். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தாவி விட்டார் என கடுமையாக விமர்சித்தார்.
கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் அவருடைய அணியில் ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் சேர்ந்து கட்சியை பாழாக்கி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவிகளை கொடுப்பதாகவும் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு துரோகம் செய்து வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை வீசினார்.
பாவ மன்னிப்பு
இதையடுத்து கோவை செல்வராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கரை ஆண்டுகள் அதிமுகவில் இருந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்தார்.