தென் மண்டல ஐஜி வார்னிங்.. கடுமையான ஆக்ஷன்.. ‘தனக்குத் தானே’ பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டால்..!
மதுரை : வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளம்பரத்திற்காக தனக்குத் தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றம் நிலவும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு - தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- 250 பேரிடம் விசாரணை: டிஜிபி சைலேந்திரபாபு
பெட்ரோல் குண்டு வீச்சு
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள், பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
பாஜக தொடர்புடைய இடங்களில்
இதனால், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாஜக தொடர்புடைய இரங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை
மதுரை அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகியான எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் தொட்ர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால், மதுரையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கன்னியாகுமரியிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டம்
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
தென் மண்டல ஐஜி அதிரடி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், "தென் மண்டலத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குண்டு வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தனக்குத் தானே வீசிக்கொண்டால்
மேலும் பேசிய அவர், "வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரத்திற்காக தனக்குத் தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.