மல்லி மல்லி.. மவுசு மங்காத "மதுரை மல்லி".. சொல்லி அடித்த கில்லி.. இனி கடல்கடந்தும் வாசம் வீசப்போகுதே
மதுரை மல்லி இனிமேல் மஸ்கட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாம்
மதுரை: மதுரை மல்லி கடல் கடந்தும் வாசம் வீசப்போகிறது.. ஆம், இதற்காக ஏற்கனவே புவிசார் குறியீடு நாம் பெற்றிருந்தாலும், மஸ்கட் நகருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது, தமிழகத்துக்கே கிடைத்த பெருமையாகும்.
மதுரை என்றாலே நம் நினைவுக்குவருவது மீனாட்சி அம்மனும், மூக்கை துளைத்து கொண்டு போகும் மதுரை மல்லியும்தான்.
'மதுரை மல்லி' மதுரையில் மட்டும் புகழ்பெற்றது கிடையாது.. உலக அளவில் பிரசித்திபெற்றது... பொதுவாக, 'மல்லி' என்றால் பருத்தது, உருண்டது, தடித்தது என்று அர்த்தமாம்..
மல்லிகை பூ விலை கடும் உயர்வு - நந்தியா வட்டை பூவை சேலம் மல்லி என கூறி மோசடி!
மதுரை மல்லி
மதுரை மல்லியும் பார்ப்பதற்கு, பருத்தும், உருண்டும், பளபளவென வெண்மையான நிறத்தில் மின்னும்.. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த மல்லி விளைகிறது... மதுரை மல்லிக்கான புவிசார் குறியீடு, 2010-ம் ஆண்டு மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர், பிரத்யேகமாக விண்ணப்பித்திருந்தனர்.. இறுதியில், 2013-ம் ஆண்டு இதற்கான அங்கீகாரத்தை பெற்றனர்... மற்ற மல்லிக்கும், மதுரை மல்லிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்த பூ அதிக வாசம் கொண்டதுடன், 2 நாள்கள் வரை வாடாமல் அப்படியே பிரஷ்ஷாக காணப்படும்..
சிங்கப்பூர் மார்க்கெட்
மதுரையில் காலையில் பறிக்கும் மல்லிகைப்பூ, அன்றைய தினம் இரவே சிங்கப்பூர் மார்க்கெட்டுக்கு சென்றுவிடுமாம்.. அந்த அளவுக்கு மதுரை மல்லிக்கு உலக அளவில் கிராக்கி இன்னமும் உள்ளது. இப்போது இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த மதுரை மல்லி பூ மஸ்கட் நகருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாம்.. இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.. அதில் உள்ளதாவது:
அல்லி = பிச்சிப்பூ = முல்லை
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக மதுரை மல்லி மற்றும் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, மரிக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவை மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பி வைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பெஸ்ட் + குவாலிட்டி
இந்த நிகழ்ச்சியில், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் பிரவீன் குமார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையின் இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் அருண் பஜாஜ் மற்றும் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓமன் நாட்டிற்கான துணைத் தூதர் பிரவீன் குமார், "மிகப் பெரிய இறக்குமதி நாடான ஓமனுக்கு வேளாண் மற்றும் இதர உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்றுமதி செய்யும் நாடு, தேவைப்படும் தரத்தை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
KG 500 மல்லி
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆர்.பிருந்தாதேவி பேசும்போது, "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்காக பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான பொருட்களை வழங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு மாநில அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்" என்றார்... இந்த நிகழ்ச்சியில், ஓமனின் தலைநகரான மஸ்கட் நகருக்கு தமிழகத்தின் புவிசார் குறியீடு பெற்ற சுமார் 500 கிலோ மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.