போதை கலாச்சாரத்தால் தமிழ்நாடு சீரழிகிறது.. போலீஸ் கைகளை கட்டி வச்சு இருக்காங்க! அண்ணாமலை ஆவேசம்
மதுரை: கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் கடந்த ஒரு வருடமாக போதை கலாச்சாரத்தால் சீரழிந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காவல்துறையினரின் கைகளை தமிழக அரசு கட்டிப்போட்டுள்ளதாகவும், அதுவே தமிழகம் இத்தகைய மோசமான நிலைக்கு செல்ல காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் எங்கு செல்லும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

'நெஞ்சம் பதறுகிறது'
மதுரைக்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மதுரையில் அண்மையில் இரண்டு மகளிர் கல்லூரிகள் முன்பு இளைஞர்கள் செய்த அட்டூழியத்தை தமிழகமே பார்த்து அதிர்ந்து போனது. அவர்கள் செய்யும் செயல்களை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு மது, கஞ்சா பயன்பாடுதான் முக்கிய காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும். வீடியோவில் அந்த இளைஞர்களை பார்க்கும் போதே அது தெளிவாக தெரிகிறது.

போதை கலாச்சாரம்..
கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் இன்று போதை கலாச்சாரத்தில் சீரழிந்து கொண்டிருக்கிறது. மதுவும், கஞ்சாவும் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் கூட பேருந்தில் பீர் பாட்டிலுடன் செல்லும் அளவுக்குதான் தமிழகத்தின் இன்றைய நிலை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே தமிழகம் இவ்வாறு சீரழிவை நோக்கி செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாலையில் பெண்கள் நடந்து செல்ல கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

போலீஸ் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன..
போதைக் கலாச்சாரம் பெருகுவது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. தவறு செய்தவர்களை அதட்டுவதற்கு கூட பயப்படும் நிலையில்தான் இன்று தமிழகத்தில் போலீஸார் இருக்கின்றனர். போலீஸார் இப்படி இருந்தால், சமூக விரோதிகளுக்கு அவர்கள் மீது எப்படி பயம் இருக்கும்? அதனால்தான், மதுவையும், கஞ்சாவையும் அடித்துவிட்டு இளைஞர்கள் அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கும், சமூகத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. காவல்துறை சீரழிந்தால் சமூகமும் சீரழியும் என்பதை அரசு உணர வேண்டும். காவல்துறையை கட்டுப்படுத்தினால் சமூக விரோதிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியாது.

லத்தி என்ன பூஜை செய்வதற்கா?
தமிழகத்தில் போதைப்பழக்கத்தை ஒழித்தால் மட்டுமே இளைஞர்கள் சமுதாயத்துடன் ஒன்றி வருவார்கள். இதை கட்டுப்படுத்த போலீஸாருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். போலீஸாரின் கைகளில் இருக்கும் லத்தி பூஜை செய்வதற்காகவா கொடுக்கப்பட்டிருக்கிறது? சமூக விரோதிகள் தவறு செய்யும் போது லத்தியை பயன்படுத்த வேண்டும். அப்படிதான் தமிழகத்தில் இத்தனை காலமாக போலீஸார் செய்து கொண்டிருந்தார். ஆனால், கடந்த ஒரு வருடமாக, தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் போலீஸார் தற்போது அமைதியாகி விட்டார்கள். போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்றால், இன்னும் 5 வருடத்தில் தமிழகம் எங்கு போகும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications