திருப்பரங்குன்றத்தில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்து இந்து முன்னணி ஆவேசம்! அடுத்தது என்ன?
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்ததுபடி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதை கண்டித்து இந்து முன்னணி, பாஜகவினர் திரண்டு வந்து போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

தீபத் திருநாளின் போது வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்புதான் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இதையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நெய், திரி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணிக்கு கோயில் பணியாளர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து உச்சி பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில்தான் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதை அறிந்த இந்து முன்னணியினர், பாஜகவினர் திரண்டு போலீஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு 16 கால் மண்டபம் வரை வந்தனர். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. எனினும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடையை மீறி போராட்டம் நடத்திய இந்து அமைப்பினரை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications