'திராவிட உணவகம்' பழசை மறக்கல.. எங்கே உட்கார்ந்து சாப்பிடுகிறார் பாருங்க பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போதே 'தி.மு.க வெற்றி பெற்றால் இவர்தான் நிதி அமைச்சராக வருவார்' என்று தேர்தலுக்கு தேர்தலுக்கு முன்பே மக்களால் அறியப்பட்டவர்.
எதிர்பார்த்தபடியே நிதி அமைச்சராக ஆக்கப்பட்டார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பல உயர் படிப்புகளை படித்தவர். மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பதால் நாட்டில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக செயல்படுவார் என்று பிடி.ஆர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
எதையும் அதிரடியாக பேசக்கூடியவர் என்பதால் டுவிட்டரில் கருத்துகளை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கினார் பிடிஆர். இது ஒரு புறமிருக்க இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தபோதிலும் 'நான் பழசை எப்போதும் மறக்க மாட்டேன்' என்பதை நிரூபித்துள்ளார் அவர். பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்துள்ள பிடிஆரின் சொந்த ஊர் தூங்கா நகரம், கோவில் நகரம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை ஆகும்.

'திராவிட உணவகம்'
மதுரை ஆரப்பாளையம் பொன்னகரத்தில் உள்ள பள்ளியில்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார். இவர் படித்த பள்ளியின் கேட் அருகில் பழமை வாய்ந்த 'திராவிட உணவகம்' என்னும் சாலையோர ஹோட்டல் உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்தில் பிடிஆர் மட்டுமின்றி சக மாணவர்களும் இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளனர்.

பிடிஆர் பகிந்துள்ள படம்
பின்பு காலங்கள் உருண்டோடினாலும், கட்சி பிரமுகர், எம்.எல்.ஏ, தற்போது அமைச்சர் என்று உயர் பதவிகள் வந்த போதிலும் திராவிட உணவகத்தை பிடிஆர் எப்போதும் மறப்பதில்லை. இந்த நிலையில் தனது பால்ய நண்பரான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் ஆனந்த் செல்வா என்பவருடன் திராவிட உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் படத்தை டுவிட்டரில் பிடிஆர் பகிந்துள்ளார்.

பசுமையான நினைவுகள்
''நிலையானது, சில மாற்றம்... எங்கள் பள்ளியின் கேட் அருகே உள்ள திராவிட உணவகத்தில் Citi Global Consumer Bank சி.இ.ஓ ஆக இருக்கும் நண்பர் ஆனந்த் செல்வாவுடன்'' என்று டுவிட்டரில் கூறிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 1981-ம் ஆண்டு தான் படித்தபோது திராவிட உணவகத்தில் சாப்பிட்ட பசுமையான நினைவுகளையும் அசை போட்டுள்ளார். தான் மட்டுமல்லாது எவ்வளவு பெரிய வசதி படைத்த நண்பர்களாக இருந்தாலும் இந்த சாதாரணமான திராவிட உணவகத்தில் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிடிஆர்.

நெட்டிசன்கள் பாராட்டு
இந்த உணவகத்தில் சாப்பிடும்போது பள்ளியில் நிகழ்ந்த பசுமையான நினைவுகள் மனதில் நிழலாடும் என்று பிடிஆர் பேட்டியில் அடிக்கடி கூறியுள்ளார். ''உயர் பதவிக்கு சென்றாலும் பழசை மறக்கவில்லை.. சூப்பர் சார்'' என்று நெட்டிசன்கள் பிடிஆர் போட்ட ட்வீட்டுக்கு கமெண்ட்கள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications