தவெகவில் இணைகிறேனா? அரசியல் ஆசை குறித்து ஓபனாக சொன்ன TTF வாசன்!
மதுரை: தவெகவில் இணைவது போன்ற எந்த அரசியல் ஆசையும் இப்போது இல்லை என்று நடிகர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேசிக் கொண்டிருந்த போது டிடிஎஃப் வாசன், தவெகவுக்கு நன்கொடை அனுப்புவதாக நினைத்து தனியார் செய்தியின் யூடியூப் பக்கத்திற்கு நன்கொடை அளித்தார்.
இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல். அரசியல் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. இதில் டிடிஎஃப் வாசன் மட்டுமல்லாமல் நடிகர்கள் கிஷோர், அபிராமி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக எந்தவித சர்ச்சைகளிலும் டிடிஎஃப் வாசன் சிக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.

அண்மையில் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த டிடிஎஃப் வாசன், சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதெல்லாம் டிடிஎஃப் வாசன் பைக்கில் எந்தவித சாகசங்களையும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே அவர், சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்று கவனமாக இருந்தார்.
யூடியூப்பில் அடைந்த புகழ் காரணமாக இளைஞர்கள் பலரும் டிடிஎஃப் வாசனை பின் தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் படத்தின் விளம்பரப் பணிகளுக்காக மதுரை வந்த டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டிடிஎஃப் வாசன், எனக்கு வயது 25 மட்டுமே ஆகிறது.. அரசியல் பேசும் அளவிற்கு இன்னும் வளரவில்லை.. இப்போதுதான் சினிமாவில் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து படங்கள் வந்துகொண்டே இருக்கிறது.. மதுரை ஒன்றரை ஆண்டுகளாக என்னுடைய கார் கஸ்டடியில் இருக்கிறது. ஒரு ஃபோனில் பேசியதற்கு இவ்வளவு செய்வது அநியாயம் என்றே சொல்வேன்.
இன்னும் அதற்காக இஎம்ஐ கட்டிக் கொண்டே இருக்கிறேன். என்னுடைய விஷயத்தில் பயன்படுத்தாத காருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் இஎம்ஐ கட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனை நினைத்தால் வருத்தமாக உள்ளது.. விரைவாக யாராவது மீட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications