நீட்டால் பழங்குடியின கோட்டாவில் பாதிப்பு! பொங்கி எழுந்த மத்திய அமைச்சர்! பாஜகவில் எதிர்க்குரல்!
மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றிருந்தார்.
இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நீட் தேர்வால் பட்டியலின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு குறித்து ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரே இதனை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஞ்சாகுளம் விவகாரம்..பள்ளிகளில் சாதிய பாகுபாடு..நடவடிக்கை பாயும்..அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்
சிறப்பு கருத்தரங்கு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மத்திய, மாநில அரசு சார்பில் யோகா மற்றும் நேச்சிரோபதி வாயிலாக மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திட்டங்களுக்கு முன்னுரிமை
அப்போது அவர் ஆற்றிய சிறப்புரையில் மூலிகை சார்ந்த பகுதியாக நாமக்கல் மாவட்டம் திகழ்வதால், இந்த பகுதியில் மருத்துவ சுற்றுலா தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் நேச்சிரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இயற்கை மற்றும் யோகா மருத்துவங்கள் நல்ல பலனை அளித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடி இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.
ஆய்வு மையம்
கொரோனா தொற்று காலகட்டங்களில் உலகம் முழுவதும் அலோபதி மருத்துவ முறை தொற்றைக் கட்டுப்படுத்த உதவினாலும், பாரம்பரிய மருத்துவ முறையும் ஓரளவு கைகொடுத்தது. இதனையடுத்து பாரம்பரிய மருத்துவ முறையை விரிவாக்க உலக சுகாதார மையம் முதன் முறையாக இந்தியாவில் இதற்கான ஆய்வு மையம் அமைக்க முன்வந்தது. குஜராத்தில் இந்த மையம் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல இதற்கான முதற்கட்ட நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
பட்டியலின மக்களுக்கு பாதிப்பு
இதனையடுத்து மத்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டெடுக்க தொடர்ந்து முயன்று வருகிறது. இது குறித்தும் அமைச்சர் கருத்தரங்ளில் விரிவாக பேசியுள்ளார். கருத்தரங்கு முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் அத்வாலே, செய்தியளார்களுக்கு பேட்டியளித்தார். அதில், "நீட் தேர்வால் பட்டியலின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். அதாவது, "நீட் தேர்வால் SC,ST தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான கோட்டாவில் பாதிப்பு ஏற்படுகிறது. MBBS போன்ற படிப்பை படிக்க தகுதியுடையவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்." என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தற்போது ஆளும் கட்சியை சார்த்த மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.