வீரவசனம்..!டெல்லி சென்று எதை சாதித்தார்?அவரை போல சட்டையை கிழித்து நாடகம் போடமாட்டோம்.. செல்லூர் ராஜூ
மதுரை: வீர வசனம் பேசிக் கொண்டு டெல்லி சென்ற ஸ்டாலின் எதைச் சாதித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டசபையில் ஸ்டாலின் போல சட்டையைக் கிழித்துக் கொண்டு நாடகம் போடாமல், எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்,
மதுரையில் இன்று பல்வேறு அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் இரட்டைவேடங்களில் நடித்த படங்களைப் போல அதிமுக கட்சி இரண்டு தலைவர்கள் கீழ் வெற்றிநடை போடுவதாகக் குறிப்பிட்டார்.

வீர வசனம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "தமிழ்நாட்டிற்கு கச்சத்தீவு, ஸ்டெர்லைட், காவிரி, முல்லைப்பெரியாறு என ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் திமுக ஆட்சியில் ஏற்பட்டவை. இதிலிருந்து பிரச்சினைகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்ட கட்சி அதிமுக. இங்கிருந்து டெல்லிக்கு போகும் போது முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசிக்கொண்டு சென்றார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை" என்றார்.

11 மருத்துவமனைகள்
பிரதமருடன் முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ள குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி சந்திப்பு மிகச் சிறப்பான ஒன்றாகவே இருந்தது. ஓர் ஆண்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சுமார் 11 புதிய மருத்துவமனைகளுக்கான அனுமதியைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

ஸ்டாலினால் முடியாது
எத்தனை ஸ்டாலின் வந்தாலும் இதையெல்லாம் செய்ய முடியாது. முதலில் தமிழ்நாட்டிற்குத் தேவையானதைச் செய்யட்டும். தேர்தலுக்கு முன், ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறியவர்கள் இவர்கள். அதைச் செய்தார்களா? இப்போது அமைச்சரே நீட் தேர்வுக்குத் தயாராகச் சொல்கிறார். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுக தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பொய்யான வாக்குறுதி
இந்தியாவிலேயே மக்களிடம் பொய்யான தகவலையும் பொய்யான வாக்குறுதியையும் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக தான். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத்தான் நாங்களும் செய்தோம். மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு மட்டும்தான் ஆதரவு கொடுத்தோம். மக்கள் விரோத திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து எதிர்த்து உள்ளது.

இரண்டு தலைவர்கள்
உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப பிரதமர் மோடி நடந்து கொண்டார். தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று திமுக சொன்னாலும், முதல்வர் பதவிக்காக ஸ்டாலினை மரியாதையுடன் பிரதமர் மோடி நடத்தியிருக்கிறார். அதிமுக கட்சி இரண்டு தலைவர்கள் கீழ் வெற்றிநடை போடுகிறது. கட்சியை பிளவுபடுத்தச் சிலர் முயல்கின்றனர். ஆனால் அது பயன் தராது.

டாஸ்மாக் கடைகள்
தமிழ்நாட்டில் கள்ளா சாராயம் பெருகிவிட்டதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அதாவது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பின்தங்கிவிட்டது. காவல்துறையின் கண்காணிப்பு போசியளவில் இல்லை என்று இவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது கள்ளச்சாராயிரம் இல்லை. இப்போது கள்ளச்சாராயிரம் உள்ளதாக ஆளும் கட்சியினரே கூறுகின்றனர்.
Recommended Video

சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம்
இந்தியா முழுவதுமே தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் ஏதோ இவர்கள் நடவடிக்கைகளால் கொரோனா குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதேபோல சட்டசபையில் ஆக்கப்பூர்வமான ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும். சட்டசபையில் அவரைப் போலச் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications