அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. 20 காளைகளை அடக்கிய பூவந்தி அபி சித்தர்.. யாருக்கு என்ன பரிசு?
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. இதில் 20 காளைகளை அடக்கிய பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்து கார் பரிசை வென்று அசத்தியுள்ளார். தொடர்ந்து பொதும்பு ஸ்ரீதர் 13 காளைகளை அடக்கி 2வது இடத்தையும், மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடர்ந்து உழவர் திருநாளான இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்க, வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து காளைகள் பாய்ந்தன.

அதனை அடக்க மாடுபிடி வீரர்கள் குதூகலமாக போராடினர். இதனால் ஜல்லிக்கட்டின் ஒவ்வொரு சுற்றும் விறுவிறுப்பாக அமைந்தது. இறுதியாக ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு, இறுதிச்சுற்றில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை முதல் சுற்றில் இருந்தே அதிக காளைகளை அடக்கிய பூவந்தி பகுதியைச் சேர்ந்த அபி சித்தர் முன்னிலை வகித்து வந்தார்.
இவருக்கு பொதும்பு ஸ்ரீதர் சவால் அளிக்க, திடீரென அபி சித்தர் அடுத்தடுத்து காளைகளை பிடித்து அசத்தினார். இறுதியாக பூவந்தி அபி சித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு கொடுத்ததில் சர்ச்சை எழுந்தது. அதில் அபி சித்தர் 2வது இடத்தில் நிறைவு செய்ததாக கூறப்பட்டது. அப்போது அமைச்சர் மூர்த்தி தன் தொகுதியைச் சேர்ந்தவருக்கு முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்று மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் 2வது பரிசை வாங்காமல் அபி சித்தர் புறக்கணித்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார். அப்போது 10 மாடுகளை அடக்கிய அபி சித்தருக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. அப்போது மஹேந்திரா தார் ஜீப்பும், ஒரு லட்சம் ரொக்கமும் பரிசாக அளிக்கப்பட்டது. இருந்தாலும் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் இழந்த இடத்தை இம்முறை கைப்பற்றி அசத்தியுள்ளார் அபி சித்தர்.
இதில் சிறந்த மாடுபிடி வீரரான அபி சித்தருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பொதும்பு ஸ்ரீதர் 13 காளைகளை அடக்கி 2வது இடத்தையும், மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2வது இடம் பிடித்த ஸ்ரீதருக்கு ஷேர் ஆட்டோ பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 3வது இடம்பிடித்த விக்னேஷ்-க்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறந்த மாடுபிடி வீரருக்கான 4வது பரிசு ஏனாதி அஜய்-க்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைக்கான முதல் பரிசு சேலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பாகுபலிக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் பரிசு வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது பரிசு வக்கீல் பார்த்தசாரதி காளைக்கும், 3வது பரிசு இலங்கையைச் சேர்ந்த செந்தில் தொண்டைமானுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications