உலகப்புகழ் பெற்ற டி.குண்ணத்தூர் கைலிகள்..அழிவின் விளிம்பில் கைத்தறி நெசவு..முதல்வர் காக்க கோரிக்கை
மதுரை: அழிந்து வரும் நிலையில் உள்ள கைத்தறி நெசவு தொழிலையும் நூற்றுக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் சுற்றுவட்டார நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கைலி தயாரிக்கும் தொழில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டிருந்தனர். தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழில் செய்து வந்த குடும்பத்தினர் படிப்படியாக நெசவுத் தொழிலை விட்டு விட்டனர்.

நாளடைவில் மின் எந்திரங்கள் மூலம் தயாரிப்பு, நூல் விலை உயர்வு, மூலப்பெருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் நெசவு தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை நம்பி வாழும் குடும்பங்களும் மாற்று தொழில் தேடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூன்று செயல்பட்டு வந்த நிலையில் சௌடாம்பிகா நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூடப்பட்டதால் நெசவாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது முருகன் நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் பல பெண்கள் நெசவுத் தொழிலை செய்து வருகின்றனர். விலைவாசி உயர்வில் நெசவு செய்யும் கூலி கட்டுபடியாகவில்லை. இதனால் பல நெசவுத் தொழிலாளர்களும் 100 நாட்கள் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர்.
அழிந்து வரும் நிலையில் உள்ள கைத்தறி நெசவு தொழிலை தமிழக அரசு காக்க வேண்டும் என்று கைத்தறி கைலிக்கு பெயர் பெற்ற மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் சுற்று வட்டார நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கைத்தறி நெசவு மூலம் கைலிகள் தயார் செய்யும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கைத்தறி நெசவு தொழிலை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னத்தூரில் கைத்தறி நெசவு தொழில் மூலம் தயாரிக்கப்படும் கைலிகள் தமிழக மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டிலும் ஏற்றுமதியாகி வருகிறது. இதுபோன்று கைத்தறி நெசவு மூலம் தயாரிக்கப்படும் கைலிகள் நீண்ட நாள் உழைக்கும் என்பதால் இதனை பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனையாளர்கள் இக்கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோன்று டி.கல்லுப்பட்டி அருகே பி.தொட்டியப்பட்டி கிராமத்திலும் தொழில் ஏராளமான நெசவாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள நெசவுத் தொழிலை காக்கவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நூற்றுக்கணக்கான நெசவாளர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications