கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட காதலியை ஆற்றங்கரைக்கு வரவழைத்து கொன்று புதைத்து விட்டு கூலாக வலம் வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் சித்தூரில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளத
சித்தூர்: தகாத உறவினால் பணம் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு அதை திருப்பி கேட்டால் கொலை செய்யும் கலாச்சாரம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கள்ளக்காதலன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்த பெண் ஒருவர், ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் தனிமையான இடத்திற்கு வரவழைத்து கொன்று புதைத்து விட்டு எதுவுமே தெரியாதது போல வலம் வந்துள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பானு என்பதாகும். சித்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் உள்ள பி வி புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவியாவார். திருமணம் செய்த சில மாதங்களிலேயே சேகருக்கும் பானுவிற்கும் பிரச்சினை ஏற்படவே கணவனை விட்டு பிரிந்த பானு தனது அம்மாவிட்டு வந்துவிட்டார்.

அதே ஊரைச் சேர்ந்த ஜேசிபி டிரைவர் ஹரி என்பவருடன் பானுவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் உடல் ரீதியான பழக்கமாக மாறியது. பானுவின் தேவை உணர்ந்த ஹரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். அடிக்கடி பானுவிடம் பணம் கேட்டு வாங்கினான் ஆனால் திரும்ப தருவதில்லையாம்.
அம்மாவிடம் செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டு வாங்கி ஹரிக்கு கொடுத்து வந்தார் பானு. ஆயிரங்கள் லட்சங்களாக மாறும் வரை பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது. ஹரி பணம் கேட்டு நச்சரிப்பது அதிகரிக்கவே பானு சுதாரித்தார். இனிமேல் பணம் கொடுக்க முடியாது என்றும் ஏற்கனவே கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி கொடு என்றும் பானு கேட்கவே அதிர்ச்சியடைந்தார் ஹரி. ஆனாலும் பணத்தை திருப்பி தரவில்லை.
பானு தனது பெற்றோர்களிடம் கூறி பணம் கேட்டு ஹரி தொந்தரவு செய்வதை கூறியுள்ளார். பானுவின் பெற்றோர் போலீசில் புகார் கூறி பாதி பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இந்த பிரச்சினை முடிந்து ஒருநாள் பானுவிற்கு ஹரி போன் செய்தார். ஆற்றங்கரைக்கு வா மீதி பணத்தை தருகிறேன் என்று கூறி வரவழைத்தான்.
ஆற்றங்கரைக்கு நம்பி போன பானுவிற்கு தெரியாது எமன் அங்கே ஹரி வடிவத்தில் காத்திருக்கிறான் என்று. வழக்கம் போல பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்த ஹரி பானுவை கீழே தள்ளினான். மணலில் தள்ளிவிட்டு பானுவின் மூச்சை நிறுத்தினான். ஆற்றங்கரையிலேயே புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்.
பானுவின் பெற்றோர் தங்களின் மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் பானுவின் செல்போனை வைத்து விசாரித்ததில் ஹரியுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்தே ஹரியை தட்டி தூக்கி போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதோடு போலீசில் புகார் கொடுத்ததால் கோபத்தில் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
ஹரியின் வாக்குமூலத்தை வைத்து பானு உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். தகாத உறவில் தொடங்கி பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையாகி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications