சிவசேனாவுக்கு மேலும் நெருக்கடி.. சஞ்சய் ராவத்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. மும்பை கோர்ட் உத்தரவு
மும்பை: "பத்ரா சால் நில மோசடி வழக்கில்" சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளவர் எம்.பி சஞ்சய் ராவத்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியரான இவர் மீது பத்ரா சால் நிலமோசடி வழக்கு பதியபட்டது. இது தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி வந்தனர்.

ஆஜராகவில்லை
ஆனால் சஞ்சய் ராவத் இந்த குற்றச்சாட்டை மறுத்தோடு, பாஜனதாவினர் தான் வேண்டுமென்றே இந்த வழக்கை பதிந்துள்ளனர் என்றும், மேலும் தன்னை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து வெளியேற்ற பாஜனதாவின முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் நாங்கள் உண்மையான சிவசேனா அணியினர். செத்தாலும் இதிலிருந்து பிரிய மாட்டேன் என்று கூறி வந்தார். இதன் காரணமாக இரண்டு முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தும் சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

10 மணி நேர சோதனை
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீடு மற்றும் மும்பையில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர், மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராவத்தை வீட்டில் இருந்து மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நள்ளிரவில் சஞ்செய் ராவத் கைது செய்தனர். இதில் அவரது வீட்டில் 11 கோடி ரூபாய கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்தது
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரது மனைவி வர்ஷா ராவத்திடமும் கடந்த வாரம் 9 மணி நேரம் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து அவரையும் கைது செய்த அமலாக்கத்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத்தை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது பத்ரா சால் முறைகேட்டின் மூலம் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் ரூ.1 கோடியே 6 லட்சத்தை பெற்றதாக அமலாக்கத்துறை கூறியது. மேலும் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறிய அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்டு 8-ந் தேதி வரை காவலை நீட்டித்து விசாரித்து வந்ததது. இந்த நிலையில் இன்றுடன் அமலாக்கத்துறையினரின் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்
இந்த வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிபதி எம்ஜி தேஷ்பாண்டே விசாரித்தார். அப்போது இருதரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, சஞ்சய் ராவத் எம்.பிக்கு 14 நாட்கள் அதாவது ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது சஞ்சய் ராவத் எம்பி சார்பில் உடல் நிலையை காரணம் காட்டி வீட்டு உணவு மற்றும் மருந்துகளுக்கு அனுமதிக்குமாறும், சிறப்பு படுக்கைகளுக்கு அனுமதிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதி, சஞ்சய் ராவத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வீட்டில் இருந்ந்து உணவு கொண்டு வந்த பரிமாறப்படலாம் என்றும் மருந்துகளை அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications