கை கோர்க்கும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்.. மகாராஷ்டிராவில் லோக் சபா கூட்டணி முடிவானது!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இப்போதே பல மாநிலங்களில் தேர்தல் கூட்டணிகள் முடிவாகிவிட்டது. முக்கியமாக பீகார் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களில் கூட்டணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனியாக நிற்கிறது. பாஜக தனது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உத்தர பிரதேசத்தில் நிற்கிறது. மாறாக பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி உத்தர பிரதேசத்தில் பெரிய கூட்டணி அமைத்துள்ளது.
பீகார் என்ன?
அதேபோல் பீகாரில் லோக் சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அங்கு காங்கிரசின் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆர்எல்எஸ்பி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா முக்கியம்
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. நேற்று நடனடஹ் ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.48 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்களை ஒதுக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டு இருக்கிறது.
எத்தனை இடங்கள்
எத்தனை இடங்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் இடம் எத்தனை பகிரப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் சில சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இந்த கூட்டணி தெரிவித்துள்ளது.
ஆரம்பம்
இந்த கூட்டணி முடிவாகிவிட்டதாகவும், சிறிய கட்சிகள் வந்தால், தேசிய வாத காங்கிரஸ் தனது இடத்தில் சிலவற்றை கொடுக்கும் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக தற்போது தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா மிக முக்கியமான மாநிலம் என்பதால் காங்கிரஸ் அங்கு முதல் ஆளாக கூட்டணியை அறிவித்துள்ளது. இதனால் பாஜகவும் விரைவில் அங்கு கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.