'டவ் தே' புயலால்.. நடுக்கடலில் மூழ்கிய கப்பல்.. 37 பேர் உயிரிழப்பு.. 188 பேர் பத்திரமாக மீட்பு!
மும்பை: 'டவ் தே புயல் காரணமாக கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 188 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் 37 பேர் உயிரிழந்தனர்.
அரபிக்கடலில் உருவான ''டவ் தே' புயல் குஜராத், மகாராஷ்டிரா கர்நாடக மாநிலங்களை புரட்டி போட்டு விட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத் மாநிலத்தில் கரையை கடைந்த புயல் இந்த 3 மாநிலங்களிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ருத்ரதாண்டவமாடிய டவ் தே
இந்த புயல் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகள் வழியாக சென்றபோது மாநில தலைநகரான மும்பையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.மும்பை அருகே நடுக்கடலில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த கப்பல்கள் இந்த கோர புயலின் ருத்ரதாண்டவத்தில் சிக்கிக் கொண்டன.

மூழ்கிய கப்பல்
மும்பையின் தென் மேற்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் 261 ஊழியர்களுடன் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பி-305 என்ற கப்பல் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. பேரலைகள் காரணமாக நங்கூரத்தில் இருந்து விடுபட்ட அந்த கப்பல் தடுமாற தொடங்கியது. பின்னர் தண்ணீர் உட்புகுந்ததனால் அந்த கப்பல் மூழ்க தொடங்கியது.

தத்தளித்த ஊழியர்கள்
கப்பலில் இருந்த ஊழியர்கள் பலர் உயிர் காக்கும் கவச உடையுடன்(லைப் ஜாக்கெட்) கடலில் குதித்து தத்தளித்தனர். கடற்படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஐ.என்.எஸ் கொச்சி போர்க்கப்பல், கடற்படைக்கு சொந்தமான மேலும் சில கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. விமானப்படை ஹெலிகாப்டர்களும் நீரில் உயிருக்கு போராடிய பலரை மீட்டது.

37 உடல்கள் மீட்பு
தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகல் பாராமல் கடும் கடல் கொந்தளிப்பை சமாளித்து இந்த மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. அங்கு இருந்து இதுவரை 37 உடல்கள் மீட்கபட்டுள்ளன. 188 ஊழியர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 38 பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. அவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்துள்ளதால் உயிருடன் மீட்க முடியும் என்று மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறினார்கள்.

போலீசார் விசாரணை
இதேபோல் எண்ணெய் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற கப்பல்களில் இருந்தும் ஏராளாமான ஊழியர்கள் மீட்கப்பட்டனர். டேவ் தே சூறாவளி குறித்து தொடர்ச்சியான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதனை பொருட்படுத்தாமல் கொந்தளிப்பான கடலில் கப்பல்களை நிறுத்தி வைத்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். கப்பல் ஊழியர்கள் இறப்பை விபத்து வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications